தமிழகத்தில் அமைச்சர் பதவி கேட்போம்-தங்கபாலு
சென்னை: திமுக அமைச்சரவையில் உரிய நேரத்தில் அமைச்சர் பதவியை காங்கிரஸ் கேட்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
காங்கிரஸ் கட்சி ஒரு மாநில கட்சி அல்ல. அது நாடு முழுவதும் பரவியுள்ள தேசிய கட்சியாகும். காங்கிரஸ் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் செயற்குழுவில் விவாதித்துதான் தெளிவான முடிவை எடுப்பது வழக்கம்.
எங்களை பொறுத்தவரை எங்கள் கட்சித் தலைமையை நாங்கள் எப்போதும் மதிப்பவர்கள். ஆட்சியில் பங்கு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்.
அதே சமயம் புதிதாக அமையவிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுவில் இது பற்றி விவாதித்து அதனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைப்போம்.
காங்கிரசை பொறுத்தவரை இதுவொரு ஜனநாயக கட்சியாகும். தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், எம்எல்ஏக்களின் உணர்வுகளையும் காங்கிரஸ் தலைவரை சந்திக்கும் போதெல்லாம் தெரியப்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி செய்ய காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தருகிறது.
ஆட்சியில் இருந்தால் மட்டும்தான் காங்கிரஸ் வளரும் என்பதில்லை. இதற்காக நாங்கள் நேரடியாக மோத வேண்டும் என்று செய்தியாளர்களாகிய நீங்களும், மக்களும் நினைக்கிறீர்கள்.
அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நடக்கும். எங்களது அடுத்த இலக்கு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற எங்கள் கொள்கைகளையும், நிறைவேற்றிய திட்டங்களையும் கிராமம் தோறும் மக்கள் மத்தியில் எடுத்து கூறுவதுதான்.
எங்களுக்கென்று ஒரு கொள்கை உள்ளது. அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம்.
தேமுதிகவுடன் கூட்டணியா?:
கூட்டணி பற்றிய முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் முடிவெடுப்பார். விஜயகாந்த் என் நண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சோனியா தலைமையை ஆதரித்து, வருகின்ற அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி பேசப்படும் என்றார்.