மின்வெட்டு: சட்டசபையைக் கலைக்க ஜெ. கோரிக்கை

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தற்போது தமிழ்நாட்டில் "அறிவிக்கப்பட்ட மின்வெட்டு', "அறிவிக்கப் படாத மின்வெட்டு' என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
தற்போதைய மின் நிலைமைக்கு திமுக அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.
அரசு சொல்லும் 2வது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப் படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.
காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பி லிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.
நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந் தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.
இன்னும் சில காரணங்களான "குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது', "மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது' போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சட்டசபையை கலைக்க வேண்டும்:
முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.
இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications