தீவிரவாத தாக்குதல்-மணிப்பூர் முதல்வர் தப்பினார்
இம்பால்: மணிப்பூர் மாநில முதல்வர் ஓக்ராம் சிங்கின் வீடு மீது தீவிரவாதிகள் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் நேற்றிரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் முதல்வர் தப்பினார்.
மணிப்பூரில் முதல்வர் ஓக்ராம் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது வீட்டின் மீது பயங்கரவாதிகள் நேற்று இரவு 9 மணியளவில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்போது முதல்வரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த தாக்குதலில் சுற்றுச்சுவர் மற்றும் முதல்வர் வீட்டு வளாகத்தில் உள்ள சிறிய கோயில் சேதமடைந்தன.
மக்கள் புரட்சிகர கட்சி என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இம்பால் நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் சிங்கை கொலை செய்வதற்காக கடந்த 2003 மற்றும் 2006ம் ஆண்டுகளில் பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.