சென்னை 2வது மாஸ்டர் பிளான் வெளியீடு-இனி 100 மாடி கட்டலாம்!

சென்னை மாநகருக்கான முதலாவது மாஸ்டர் பிளான் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு சென்னை மாநகரம் மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்டது. மக்கள் தொகைப் பெருக்கமும், வெளியூர், வெளிமாநிலத்தவரின் பெருக்கமும் அதிகரித்ததால், சென்னை மாநகரம் இடப் பற்றாக்குறையாலும், போக்குவரத்து நெரிசலாலும், கட்டடப் பற்றாக்குறையாலும் திணறியது.
இதையடுத்து 2வது மாஸ்டர் பிளானுக்கு திட்டமிடப்பட்டது. இந்த 2வது மாஸ்டர் பிளானுக்கு சமீபத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 2வது மாஸ்டர் பிளானில் உள்ள அம்சங்களை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் நேற்று வெளியிட்டது. அமைச்சர் பரிதி இளம்வழுதி இதனை வெளியிட்டார்.
2026ம் ஆண்டை இலக்காக வைத்து இந்த 2வது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநகரின் இடப் பற்றாக்குறை, போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்டவற்றைப் போக்கும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
பல மாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு இருந்து வந்த பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் கட்டடங்களின் உயரம் குறித்து இருந்து வந்த உச்சவரம்பும் (ஸ்லாப்) நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி 100 அடி மற்றும் அதற்கு மேல் அகலம் கொண்ட சாலைகளில் இனி 100 மாடிகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டலாம். தீவுத் திடல், அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட் பகுதிகள், நீர் நிலைப் பகுதிகள், செங்குன்றம் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரமாண்டமான கட்டடங்களைக் கட்ட முடியாது.
இதன் மூலம் சென்னை பெருநகர் முழுவதும் மிக உயர்ந்த, மிகப் பெரிய கட்டடங்களைக் கட்ட முடியும்.
மேலும் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்களை அமைப்பதற்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
பணக்காரர்களுக்கு மட்டும் சாதகமாக இல்லாமல், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த மாஸ்டர் பிளானில் ஒரு சில்வர் லைன் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவிலான வீடுகளை சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கான இடத்தில் அடுக்குமாடிக்குடியிருப்புகள், குடியிருப்புகளை உருவாக்குவோர் அதில் 10 சதவீத நிலத்தை குறைந்த வருவாய் பிரிவினருக்கும், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்க வேண்டும் என இந்த மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் இனி எல்லா இடங்களிலும் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டலாம்.
புறநகர்களில் 3 அடுக்குகளுக்கு (ஜி + 3) மேல் கட்டக் கூடாது என்ற விதிமுறையும் நீக்கப்படுகிறது.
மேலும், தற்போது தரைத்தளம் மற்றும் அதற்கு மேல் உள்ள 2 அடுக்குகளை சிறப்பு கட்டடங்கள் என்று அழைக்கிறார்கள். மற்ற கட்டடங்கள் சாதாரண கட்டடம் என அழைக்கப்படுகிறது. அங்கு தற்போது நான்கு குடியிருப்புகளுக்கு மட்டுமேதற்போது அனுமதி உள்ளது. அதை இனி 6 ஆக அதிகரித்துக் கொள்ளலாம்.
40, 50, 60 அடி அகலமுள்ள சாலைகளில் இனிமேல் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டலாம். அதேபோல 30 அடி அகலம் உள்ள சாலைகளில் தரைத்தளத்திற்கு மேல் 5 மாடிகள் வரை கட்டலாம்.
அதேபோல இனிமேல் மொத்த தரைப் பரப்பில் 2 மடங்கு உயரமாக கட்டடங்களைக் கட்டிக்கொள்ளளாம். முன்பு இது ஒன்றரை மடங்காகஇருந்தது. அடுக்கு மாடிகள் அல்லாத கட்டடங்களுக்கு இது இரண்டரை மடங்கு என்பதிலிருந்து மூன்றரை மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் போக்குவரத்து, மாநகரில் உள்ள நீர் நிலைகள் வழியாக மாடி ரயில் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்துக்கு தனி பாதைகள், பஸ்களுக்கு தனிப் பாதைகள், மேம்பாலங்கள், பாதசாரிகளுக்கான சிறப்பு வசதிகள் ஆகியவையும் இந்த மாஸ்டர் பிளானில் அடக்கம்.
சென்னை நகரை உலகத்தரம் வாய்ந்த, சிறந்த வாழிட நகரமாக மாற்றும் வகையில் இந்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
மேலும், சென்னை நகரில் இனிமேல் பக்கவாட்டு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், இனி 'வெர்ட்டிக்கல'் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
இந்தியாவின் உயரமான கட்டடங்கள்:
இந்தியாவில் தற்போது மும்பை மாநகரில்தான் மிக உயரமான கட்டடங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தியாவின் முதல் பத்து உயரமான கட்டடங்கள் அனைத்துமே மும்பையில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே மிக உயரமான கட்டடம் மும்பையில் உள்ள இம்பீரியல் ஆகும். இதன் உயரம் 249 மீட்டராகும். மொத்த தளங்கள் 60 ஆகும்.
அதேபோல உலகிலேயே மிக உயரமான கட்டடம் துபாயில் உள்ள பர்ஜ் துபாய் ஆகும். இதன் உயரம் 818 மீட்டராகும். மொத்த தளங்கள் 167.
இனிமேல் சென்னை நகரமும் இந்த உயர நகரங்கள் வரிசையில் சேரும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications