சொத்து ஏலம்-தினகரன் மனுவை நிராகரிக்க கோரிக்கை
சென்னை: பெரா போர்டு விதித்த ரூ. 28 கோடி அபராதத் தொகையை வசூலிக்க தனது சொத்தை ஏலம் விடும் சென்னை மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்.பியும் சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொருளாதார குற்ற தடுப்பு இயக்குநரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் வழக்கறிஞரான தண்டபாணி, பொருளாதாரக் குற்றத் தடுப்பு துணை இயக்குநர் மோகன்தாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த வழக்கில் எங்களையும் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மேல் விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரா சட்ட விதிமீறல் தொடர்பாக தினகருக்கு பொருளாதார குற்றத் தடுப்பு இயக்குநரகம் ரூ. 31 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து தினகரன் பெரா போர்டில் அப்பீல் செய்தார். இதையடுத்து ரூ. 28 கோடியாக அபராதம் குறைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த தொகையை வசூலிக்க சென்னையில் உள்ள தினகரின் சொத்துக்களை ஏலம் விட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் தினகரன். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏலம் விடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications