பாக். பிரதமர் கிலானியின் கார் மீது துப்பாக்கிச் சூடு
லாகூர் சென்றிருந்த கிலானி நேற்று ராவல் பிண்டி திரும்பினார். பின்னர் ராணுவ விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த குண்டு துளைக்காத காரில் ஏறி இஸ்லாமாபாத் கிளம்பினார்.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து சாலையில் கார் சென்றபோது திடீரென மர்ம ஆசாமிகள் சிலர் மறைவிடத்திலிருந்து காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தோட்டாக்கள் கார் மீது பட்டுத் தெறித்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக கிலானிக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பத்திரமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கிலானியின் செய்தித் தொடர்பாளர் ஜாஹித் பஷீர் கூறுகையில், குண்டு துளைக்காத கார் என்பதால் லேசான கீறல்கள் மட்டுமே ஏற்பட்டன. பிரதமருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என்றார்.
ஆனால் அப்போது காரில் கிலானி இல்ைல என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக செயலாளர் கமால் ஷா கூறுகையில், பிரதமரை அழைத்து வரச் சென்ற கார் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் பிரதமர் இல்ைல என்று கூறியுள்ளார்.
பிரதமர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தாங்கள்தான் என தலிபான் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. சமீபத்தில் தலிபான்களை பாகிஸ்தான் அரசு தடை செய்தது என்பது நினைவிருக்கலாம்.
இதே இடத்தில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நவாஸ் ஷெரீப் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதே ராவல்பிண்டியில்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிலானியின் கார் மீதுநடந்துள்ள துப்பாக்கிச்சூடு அந்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.