Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணு ஒப்பந்தம்: மத்திய அரசின் பொய் மூட்டைகள்-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் அப்பட்டமான பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருப்பது தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிக்கை மூலம் இப்போது தெரிய வந்திருக்கிறது.

இதன்மூலம் மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்ட மத்திய அரசு உடனே பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பல மாதங்களாக, இந்த தேசத்துடன் ஆடிவந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

அமெரிக்காவுடன், இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்து கொள்ளத் துடிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் மறைந்து கிடப்பது என்னவென்பதை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையே அம்பலப்படுத்தியிருக்கிறது.

அணுசக்தி தொழில்நுட்பம் தொடர்புடைய எந்தவொரு நவீன தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்காது.

மற்றும் இந்தியா அணுகுண்டு பரிசோதனை எதையும் மேற்கொண்டால் உடனடியாக இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்,

என்று அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசுக்கு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுத்துறை விளக்கமான கடிதம் ஒன்றின் வழியாக தெளிவுபடுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவுத்துறை குழுத் தலைவர் ஹவர்ட் எல்.பெர்மன் மேற்கோள் காட்டி தி வாஷிங்டன் போஸ்ட்' அமெரிக்க பத்திரிகை உலகின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி அடங்கிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் 26 பக்க கடிதம் கடந்த 9 மாதங்களாக மறைக்கப்பட்டு திட்டமிட்டு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

இப்படி ஒரு கடிதம் அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதும், அது ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதும் இந்திய அரசுக்குத் தெரியும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கிளென் கெஸ்லர் என்பவர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

இந்தியா அணு ஆயுத ஆற்றல் கொண்ட நாடாக இருப்பது குறித்த கருத்து எதுவும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்படாமல் இருப்பது ஏன்? என்று அதிமுக உள்ளிட்ட இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடந்த பல மாதங்களாக கேள்வி எழுப்பி வந்தன.

அறிவியல் விஞ்ஞானிகளும், அணுசக்தித் துறையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் இந்தக் கேள்வியை எழுப்பி வந்திருக்கின்றனர்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்பது நம் நாட்டின் அணுஆயுத திட்டங்கள் எதையும் கட்டுப்படுத்தாது என்றும், நம் நாட்டின் இறையாண்மையை பாதிக்காது என்றும், இந்த ஒப்பந்தத்தின் காரணமாக எதிர்காலத்தில் அணு ஆயுத பரிசோதனை நடத்தும் உரிமையை இந்தியா இழக்க வேண்டியதில்லை என்றும் மீண்டும், மீண்டும் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு கூறிவந்திருக்கிறது.

மூட்டை மூட்டையாக பணத்தைக் கொட்டி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நேரத்திலும் கூட இதே கருத்தை மத்திய அரசு வலியுறுத்தி வந்திருக்கிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காகவும், இந்திய அரசு எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கியிருக்கிறது என்று மட்டுமே நினைத்திருந்தோம்.

ஆனால், இந்திய அரசு நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் அப்பட்டமான பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

ராணுவ பயன்பாட்டிற்காகவோ அல்லது அன்றாட தேவைகளின் நிமித்தமோ அணுசக்தியை பயன்படுத்துவதா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், அது இந்தியா முடிவு செய்ய வேண்டிய பிரச்சினை.

ஒரு அந்நிய சக்தி, ஒரு வெளிநாட்டின் சட்டம், நம் நாட்டின் மீது அதுகுறித்த தனது முடிவை திணிப்பதாக இருக்கக்கூடாது.

வெளிநாட்டு சக்திகளின் கட்டளைப்படி செயல்படவும், வெளிநாட்டு அமைப்புகளின் மேற்பார்வையில் இயங்கவும், இந்தியாவின் நடவடிக்கைகளை உட்படுத்தும் வகையில் ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

இதன்மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசு நம் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளிடம் அடகு வைத்திருக்கிறது.

இத்தகைய ஓர் அரசை நாம் இனியும் நம்பமுடியாது. இந்த அரசு நாடாளுமன்றத்திலேயே பொய் சொல்லியிருக்கிறது. இந்த அரசு, இந்த தேசத்தையே ஏமாற்றியிருக்கிறது. இந்த அரசு இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அரசு நம் மக்களை கைவிட்டிருக்கிறது. இந்த அரசு மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.

இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய அரசு பதவி விலக வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங், கற்றறிந்த பொருளாதார வல்லுநர், நேர்மையான மனிதர் என்று நான் இதுவரை மதிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு சர்வதேச அரங்கில் தன்னுடைய அனைத்து மரியாதையும், நம்பகத்தன்மையையும் இழந்தவராக மன்மோகன் சிங் நிற்கிறார்.

அவர் சேர்ந்திருக்கும் அரசியல் கூட்டு காரணமாகத்தான் இந்த மரியாதை இழப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனக்கு ஏதேனும் சுயமரியாதை இன்னமும் இருப்பதாக அவர் நினைத்தால் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும்.

இந்த அணுசக்தி ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டும். இதுகுறித்து சர்வதேச அரங்கில் என்ன கருத்து ஏற்படும் என்பது குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவை ஏமாற்றி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க அமெரிக்காவால் முடியுமென்றால், அத்தகைய ஒரு ஏமாற்று ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிலை இந்தியாவுக்கு இல்லை.

இந்த ஏமாற்று விவகாரம் பற்றிய உண்மை வெளியான பிறகு, அத்தகைய ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. இந்தியா அறிவுச்செல்வம் மிகுந்த நாடு. இந்த நாட்டில் காணப்படும் ஏராளமான இயற்கை வளம் முறையாக பயன்படுத்தப்பட்டால் இந்த தேசம் சர்வதேச அரங்கில் ஒரு வல்லரசாக உயரும்.

ஒரு அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே நாம் பெருமளவு முன்னேறி இருக்கிறோம். இத்தகைய ஒப்பந்தம் இல்லாமல் இன்னும் அதிக அளவில் நம்மால் நிச்சயமாக முன்னேற முடியும். நமக்குத் தேவையானதெல்லாம் ஒரு நல்ல அரசுதான், நல்ல நிர்வாகம் தான், நல்ல வழிகாட்டுதல் தான்.

இப்பொழுது இருக்கும் அரசு அத்தகைய நல்ல நிர்வாகத்தையோ, வழிகாட்டுதலையோ நமக்கு தருகின்ற ஆற்றல் உள்ள அரசு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+