பரதனுக்கு சீறுநீரக அறுவை சிகிச்சை: நலமடைகிறார்
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பரதன் மற்றும் அக்கட்சியினர் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மஞ்சள் காமாலை மற்றும் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்ட பரதனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பரதனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது சிறுநீரகத்தில் இருந்த கற்கள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. தற்போது அவர் ஓய்வில் உள்ளார்.
அவரை கட்சி தலைவர்கள் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நலம் தேறியுள்ளதாக தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.