கலப்பு மணத்தில் கலந்து கொண்ட சிரஞ்சீவி மீது கடத்தல் வழக்கு!
ஹைதராபாத்: பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் பத்மா ராவின் மகன் கலப்புத் திருமணத்தில் கலந்து கொண்ட சிரஞ்சீவி உள்ளிட்டோர் மீது பெண் வீட்டார் கடத்தல் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் பத்மா ராவ். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது மகன் சேத்தனும், உயர் ஜாதியைச் சேர்ந்த சுப்பாராவ் - மணி தம்பதியின் மகள் நளினியும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு சுப்பாராவ் தம்பதி ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து சிரஞ்சீவி முன்னிலையில் கடந்த சனிக்கிழமை நளினி - சேத்தன் கல்யாணம் ஹைதராபாத்தில் நடந்தது. இது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
தனது மகளின் காதல் கல்யாணத்தை அங்கீகரிக்காதவர் சிரஞ்சீவி. அப்படிப்பட்டவர் எனது மகளை கட்டாயப்படுத்தி மணந்துள்ள சேத்தனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அந்தக் கல்யாணத்திலும் பங்கேற்றுள்ளார். கலப்பு திருமணம் உயர்வானது என்றும் கூறுகிறார். வீட்டுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம். அரசியல் லாபத்திற்காக இப்படி செய்துள்ளார் என்று சுப்பாராவ் காட்டமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளித்தார்.
இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென சிரஞ்சீவி, பத்மா ராவ் ஆகியோர் மீது சுப்பாராவ் கடத்தல் புகார் கொடுத்தார். இதை ஏற்று போலீஸார் அவர்கள் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குப் பதிவு ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் சர்ச்சைக்குக் காரணமான நளினி தனது கணவருடன் தொலைக்காட்சிகளுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் விரும்பித்தான் கல்யாணம் செய்து கொண்டேன்.எனது கல்யாணம் கட்டாயக் கல்யாணம் அல்ல. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.