தடையை மீறி சரவணா ஸ்டோர்ஸை திறந்த 2 ஊழியர்கள் கைது
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடையும் மூடப்பட்டது. கடையைத் திறக்க போலீஸார் தடை விதித்திருந்தும், அதை மீறி கடையைத் திறந்த அதன் கண்காணிப்பாளர் மற்றும் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் கடந்த திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இதுதொடர்பாக சரவணா ஸ்டோர்ஸின் மேலாளர் செல்வம் மற்றும் சூப்பர்வைசர் ஜெபசிங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக சரவணா ஸ்டோர்ஸ் அதிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்கள் யோக ரத்தினம் மற்றும் ராஜ ரத்தினம் ஆகியோரின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
யோக ரத்தினத்தின் மகன் யோக துரையும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடையும் அடைக்கப்பட்டுள்ளது. அதைத் திறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையை அதன் ஊழியர்கள் இரண்டு பேர் திறக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார், கடையை திறக்க அனுமதி மறுத்தனர். இதையடுத்து இருவரும் சென்று விட்டனர்.
ஆனால் போலீஸார் சென்றபிறகு அந்த ஊழியர்கள் ஜவுளிக்கடையை திறந்து விட்டனர். இதையடுத்து மக்கள் திமுதிமுவென கடைக்குள் சென்று பொருட்கள் வாங்க தொடங்கினர்.
தகவலறிந்த தி.நகர் உதவி கமிஷனர் கண்ணபிரான் தலைமையில் அங்கு சென்ற போலீசார் கடையின் சூப்பர் வைசர் ஜஸ்டினையும் மற்றொரு ஊழியரையும் கைது செய்தனர்.