இம்மாத இறுதிக்குள் அணு ஒப்பந்தத்தை அமலாக்க யு.எஸ். தீவிரம்

இந்திய - அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது.
இந்த இரு தடைகளையும் நேற்று வெற்றிகரமாக இந்தியா கடந்து விட்டது. இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகைகளைத் தர என்.எஸ்.ஜி. நேற்று ஒப்புக் கொண்டு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த காட்சி அமெரிக்காவுக்கு நகர்ந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அடுத்து ஒப்புதலைப் பெற வேண்டும்.
நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் 8ம் தேதி (நாளை) கூடுகிறது. செப்டம்பர் 26ம் தேதி அது ஒத்திவைக்கப்படவுள்ளது. அதிபர் தேர்தலுக்கு முந்தைய கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் இந்தக் கூட்டத் தொடருக்குள்ளாகவே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற்று விட வேண்டும் என புஷ் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
அதேபோல, புஷ் நிர்வாகத்தின் கீழேயே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து விட வேண்டும் என்பதில் இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. எனவே இந்த மாத இறுதிக்குள் அணு சக்தி ஒப்பந்தம் அமலுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications