சேலத்தில் திமுகவினர்-வழக்கறிஞர்கள் மோதல்
சேலம்: சேலத்தில் நடந்த சட்ட விழப்புணர்வு முகாமில் திமுக நிர்வாகிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.
சேலத்தில் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மனித உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் உரிமை அறியும் சட்டம் போன்றவைகள் குறித்து விளக்க உரை சேலம் மையப் பகுதியில் நடைபெற்றது.
அப்போது பேசிய பலரும் அரசு நிர்வாகத்தில் திமுகவினரின் தலையீடுகள் பற்றி விமர்சித்தனர். இதை தூரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அப் பகுதியின் திமுக கவுன்சிலர் குல்ஜார் முகம்மத், திமுக வார்டு செயலாளர் முகம்மத் உள்ளிட்ட சிலர் விழிப்புணர்வு கூட்டத்தில் புகுந்து வாக்கு வாதம் செய்தனர்.
வாக்குவாதம் முற்றி, வழக்கறிஞர்களை திமுகவினர் தாக்கினர். இதில் வழக்கறிஞர்கள் சிலர் நிலைகுலைந்து விழுந்து படுகாயமடைந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த வழக்கறிஞர்கள் சிலர் திமுகவினர் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மோதல் வலுத்ததை அடுத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சிதறி ஓடினர். அப்போது பலர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, விழிப்புணர்வு கூட்டத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பற்றி வழக்கறிஞர்கள் சிலர் தரக்குறைவாக பேசியதாக முகம்மத், சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications