கன்னியாகுமரி-நாகூர் தனி ரயில்: ஆர்.வேலு
மதுரை: திருவாரூரிலிருந்து நாகூருக்கு புதிய அகலப் பாதை அமைக்கும் பணி முடிந்தவுடன், கன்னியாகுமரியில் இருந்து நாகூருக்கு தனி ரயில் விடப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை, திண்டுக்கல் இடையிலான இரட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.128 கோடியில் இருந்து ரூ.200 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாதை அமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. மதுரை, கொடைக்கானல் அகல ரயில்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு வருடத்தில் 450 கிலோ மீட்டர் கேஜ் பாதை அகலப் பாதையாக மாற்றப்படும். அடுத்த ஆண்டில் 700 கிலோ மீட்டர் கேஜ் பாதை, அகலப் பாதையாக மாற்றப்படும்.
நெல்லை-திருச்செந்தூர் இடையே உள்ள ரயில் பாதைக்கான பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும். விழுப்புரம்-திருச்சி இடையே மின்மயமாக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பாதை மின் மயமாக்கப்படும்.
அடுத்த ஆண்டு மதுரையும், அதற்கு அடுத்த ஆண்டு கன்னியாகுமரியும் மின்மயமாக்கப்படும். அதே போல திருவாரூரிலிருந்து நாகூருக்கு புதிய அகலப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்தவுடன், கன்னியாகுமரியில் இருந்து நாகூருக்கு தனி ரயில் விடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications