140 இடங்களே கிடைக்கும்-சர்வே அதிர்ச்சியில் பாஜக

கடந்த லோக்சபா தேர்தலில் 130 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு வரும் தேர்தலில் 140 இடங்களே கிடைக்கும் என அந்த சர்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மீது கடும் அதிருப்தி நிலவுவதாகக் கருதப்படும் நிலையில் தனக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் 10 இடங்கள் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும் என சர்வே தெரிவித்துள்ளது பாஜகவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
அடு்த்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்பாளர்களை ஜூலை மாதத்துக்குள் அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி விடுவோம் என பாஜக அறிவித்திருந்தது.
ஆனால், எல்லா மாநிலங்களிலும் கடும் கோஷ்டிப் பூசல் நிலவுவதால் வேட்பாளர் பட்டியலை இப்போதே அறிவித்தால் உட்கட்சி மோதலே தோல்விக்கு வழி வகுத்துவிடும் என பாஜக கருதியது. இதையடுத்து வேட்பாளர் பட்டியல் வெளயிடுவதை நிறுத்தி வைத்துவிட்டது.
அமெரிக்காவுடான அணு ஒப்பந்த விஷயத்தில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு கவிழும் என பாஜக எதிர்பார்த்தது. அது நடக்கவில்லை.
இந் நிலையில் என்எஸ்ஜி கூட்டத்தி்ல் இந்தியாவுக்கு எதிராக முடிவெடுக்கப்படும் எனக் கருதியது. ஆனால், அங்கும் கடைசி நேரத்தில் தப்பிவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த வெற்றிகள் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துவிட்டது. இதனால் எங்கள் பிரச்சாரத் திட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் மூத்த பாஜக தலைவர்கள்.
இப்போது பாஜக வசம் உள்ள இன்னொரு ஆயுதம், இந்தியா அணு குண்டு சோதனை நடத்த அணு ஒப்பந்தம் தடையாக இருக்கும் என்ற பிரச்சார யுத்தி தான். அதை பாஜக முழு அளவில் பயன்படுத்தும் எனத் தெரிகிறது.
கூட்டணிக்கு ஜஸ்வந்த்:
ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் பலமான கூட்டணி அவசியம் என்பதையும் சர்வே சுட்டிக் காட்டியுள்து.
இதையடுத்து கூட்டணி குறித்து முடிவு செய்ய-பேச்சு நடத்த, தேர்தல் அறிக்கை தயார் செய்ய, விளம்பரம் மற்றும் பிரசாரத்தை கவனிக்க என 3 குழுக்களை பாஜக அமைத்துள்ளது.
கூட்டணி குறித்து முடிவு செய்ய, பேச்சு நடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவிடம் இன்னொரு முக்கியமான பணியும் தரப்பட்டுள்ளது. அது.. பாஜக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகளை மீண்டும் இழுத்து வருவதாகும்.
இந்தக் குழு ஜெயலலிதா, காஷ்மீரின் சிறுத்தைகள் கட்சி, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை உடனே தொடங்கும் எனத் தெரிகிறது.
தேர்தல் அறிக்கைக்கு ஜோஷி:
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வெங்கையா நாயுடு ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் முக்கிய முடிவுகளை ஜோஷியே எடுப்பார்.
பிரச்சார திட்டத்துக்கு ஜேட்லி:
விளம்பரம் மற்றும் பிரச்சார திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணிகளை அருண் ஜேட்லி தலைமையிலான குழு மேற்கொள்ளவுள்ளது.
இதில் மூத்த எம்பியான பல்பீர் புஞ்ச், முக்தார் அப்பாஸ் நக்வி கட்சியின் 2 செய்தித் தொடர்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications