சிரஞ்சீவி கட்சியில் பிரச்சினை-'வந்தவர்கள்' விலகல்!
ஹைதராபாத்: பதவி கிடைக்கும், பொறுப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தேடி வந்த பிற கட்சிகளைச் சேர்ந்த பலர் அதெல்லாம் கிடைக்காது என்று தெரிந்தவுடன் ஒவ்வொருவராக கழன்று கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது பக்கா தெளிவாக இருந்தார்- பதவிகளை பிரித்துக் கொடுப்பதில். ஆரம்ப காலத்திலிருந்து ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கும், கட்சியில் வந்து இணைந்த மாற்றுக் கட்சியினருக்கும் முறையாக பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் பதவிகளைப் பிரித்துக் கொடுத்தார்.
மாற்றுக் கட்சியிலிருந்து வந்த அனைவருக்கும் அவர் பெரிய பதவிகளைக் கொடுக்கவில்லை. அதேபோல ரசிகர் மன்றத்தினர் அனைவருக்கும் சிறிய பதவிகளைக் கொடுத்து விடவும் இல்லை. இரு தரப்பினரின் முக்கியத்துவம், அவர்களின் அனுபவம், திறமை ஆகியவற்றை எடை போட்டுப் பார்த்து அதற்குரிய பதவிகளை அளித்து வைத்துள்ளார். இதனால் தேமுதிகவில் பெரிய அளவில் (ஆரம்பத்தில் இருந்தது) சலசலப்பு ஏதும் இல்லை. இதற்கு முக்கிய காரணம், அரசியலில் மறைமுகமாக செயல்படுவதில் கில்லாடியான பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஆனால், சிரஞ்சீவுக்கு பண்ருட்டி மாதிரி ஆலோசகர் யாரும் இல்லை. இதனால் பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
'பெத்த' பதவி கிடைக்கும் என்ற மொத்த ஆசையில் பிரஜா ராஜ்ஜியத்தில் வந்து இணைந்த மாற்றுக் கட்சியினர் பலருக்கு பதவி கிடைக்காதது அதிருப்தியை அளித்துள்ளது. இதனால் சூட்டோடு சூடாக சிரஞ்சீவி கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர் அந்த பழம் புள்ளிகள்.
சமீபத்தில் விஜயவாடா முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயப்பிரகாஷ் விலகிக்கொள்வதாக அறிவித்தார். சிரஞ்சீவி கட்சியை குடும்ப கம்பெனி போல நடத்துகிறார். மற்றவர்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை என்று சிரஞ்சீவி மீது குற்றம்சாட்டினார்.
அதேபோல, அரசு நிதித்துறை செயலராக இருந்தவர் ரோசையா. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், சிரஞ்சீவி கட்சியில் சேர்ந்தார். அவரும் இப்போது விலகிக் கொண்டுவிட்டார்.
தெலுங்கானா பிரச்னை உட்பட பல முக்கிய விஷயங்களில் திடமான, தெளிவான கருத்து சிரஞ்சீவியிடம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இவர்களின் விலகலால் சிரஞ்சீவி கட்சியில் யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் வெளியில் செல்வாக்கு இல்லாதவர்கள். சிரஞ்சீவி கட்சியில் இணைந்தால் செல்வாக்கு பெறலாம் என்று வந்தவர்கள். இவர்கள் வெளியேறுவதால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று சிரஞ்சீவி கட்சியினர் கூறுகிறார்கள்.
சிரஞ்சீவி கட்சியின் பொது மக்கள் தொடர்புக் கமிட்டியில் அவரது குடும்பத்தினர்தான் உள்ளனர். மச்சான் அல்லு அரவிந்த், தம்பிகள் பவன் கல்யாண், பாபு ஆகியோர்தான் பொதுமக்கள் தொடர்புக் கமிட்டியின் உறுப்பினர்கள். இதுதான் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களின் பெரும் எரிச்சலாக மாறியுள்ளது. இவர்களைத் தாண்டித்தான் சிரஞ்சீவியை அவர்களால் பார்க்க முடிகிறதாம்.












Click it and Unblock the Notifications