திமுக கூட்டணியில் எப்போதும் இல்லை-சிபிஎம்
டெல்லி: திமுகவுடன் தேர்தல் உடன்பாடு மட்டுமே கொண்டோம். அந்தக் கூட்டணியில் இல்லை. எனவே கூட்டணியை விட்டு விலகுகிறோமா இல்லையா என்றே பேச்சுக்கே இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கமளித்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறுகையில்,
கடந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் அணி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள்தான் இடம் பெற்றன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த கூட்டணியுடன் தேர்தல் உடன்பாடு மட்டுமே கொண்டது.
தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப தொகுதி பங்கீடு செய்து கொண்டன. அதோடு சரி. திமுக கூட்டணியில் இடதுசாரிகள் அங்கம் வகித்தது கிடையாது. அப்படியிருக்கும்போது திமுகவுடன் உறவை முறித்துக் கொண்டதாகவோ அல்லது உறவை முறித்துக் கொள்ளப்போவதாகவோ கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை.
வரும் தேர்தலில் கூட்டணி திமுகவுடனா? அதிமுகவுடனா? என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில்தான் உரிய முடிவு எடுக்கப்படும். அந்த முடிவை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்தே எடுக்கும்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு ஆதரவு அளிப்போம். தவறுகள் நடந்தால் சுட்டிக்காட்டி போராடுவோம். இரண்டு ரூபாய்க்கு அரிசி போட்டார்கள், வரவேற்றோம். இப்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையும் வரவேற்கிறோம்.
காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்ற நிலை வந்தால் திமுகவுடன் உறவு கொள்வதில் எங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தனர்.