சீர்திருத்தப் பள்ளி ஊழியரைக் கொன்று விட்டு 6 சிறார்கள் தப்பினர்
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளி ஊழியரை மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொன்று விட்டு 6 சிறார்கள் தப்பி ஓடினர். போலீஸாரின் தீவிர முயற்சியால் அவர்களில் 2 பேர் சிக்கியுள்ளனர். மற்ற நால்வரைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் எதிரே அரசினர் கூர்நோக்கு இல்லம் (சிறார் சீர்திருத்தப் பள்ளி) உள்ளது. இங்கு 149 சிறார்கள் பல்வேறு குற்றங்களில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறார் பள்ளியின் கண்காணிப்பாளராக ரத்னம் இருக்கிறார். பல்வேறு பிரிவு ஊழியர்கள் 52 பேர் உள்ளனர்.
இங்குள்ள தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் பணியில் தஞ்சையைச் ேசர்ந்த முனுசாமி (56) என்பவர் இருந்து வந்தார்.
தினசரி காலை 9 மணிக்கு பணிக்கு வரும் முனுசாமி மாலை 5 மணி வரை பணியில் இருப்பார். அப்போது சிறார் கைதிகளை தண்ணீர் பாய்ச்சுவது, மரக் கன்று நடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவார்.
நேற்று மாலையும் வழக்கம் போல 6 சிறார்களுடன் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தார் முனுசாமி. அந்த சமயத்தில் அங்கு வேறு யாரும் இல்லை.
அப்போது முனுசாமியை சூழ்ந்த சிறுவர்கள் அவரை மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த முனுசாமி கீழே விழுந்தார். பின்னர் பேரும் சேர்ந்து சரமாரியாக அடித்தும், மண்வெட்டியால் தாக்கியும் படுகாயப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகளும், போலீஸாரும், முனுசாமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முனுசாமி உயிரிழந்தார்.
தப்பி ஓடிய சிறுவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். பஸ் நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அரசுப் பேருந்தில் தப்பிச் சென்ற தண்டாயுதபாணி (13), மினி பஸ் மூலம் தப்பிய சிங்காரவேலு (13) ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் இருவரும் கள்ளச்சாராயம் விற்றது, திருட்டு ஆகிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.
தப்பி ஓடிய மற்ற நான்கு பேரான ராஜேஷ், காரல் மார்க்ஸ், வெங்கடேஷ், செல்வம் ஆகியோரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஊழியரைக் கொன்று விட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து 6 பேர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications