ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆவின் அலுவலர் கைது
பெரம்பலூர்: பால் உற்பத்தியாளரின் பணத்தை பட்டுவாடா செய்வதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆவின் நிறுவன அலுவலர் கருணாநிதியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியின் சுற்றுவட்டார விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து பெரம்பலூரில் உள்ள ஆவின் நிறுவன குளிரூட்டும் மையத்திற்கு சப்ளை செய்து வருகிறார்.
சப்ளை செய்த பாலுக்கான பணம் ரூ.1 லட்சத்து 74,000திற்கான காசோலையை கேட்டு பெரம்பலூர் ஆவின் குளிரூட்டும் மைய தனி அலுவலர் கருணாநிதியை அணுகினார்.
அதற்கு கருணாநிதி ரூ.500 லஞ்சம் தந்தால் காசோலை தருவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துச்செல்வன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கருணாநிதியை கண்காணித்தனர். போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.500 பணத்தை கருணாநிதியிடம் முத்துச்செல்வன் லஞ்சமாக கொடுத்தார்.
கருணாநிதி பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கருணாநிதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications