போலீஸை வெளியேற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸார் மற்றும் பிரச்சினையை ஏற்படுத்துவோரை வெளியேற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதல்வராக இருந்த ஜோசப் சின்னராஜ் சமீபத்தில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் ஜார்ஜ் ஜெயக்குமார் என்பவரை புதிய முதல்வராக பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் நியமித்தார்.
ஜெயக்குமார் பதவியேற்க வந்தபோது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது.
மேலும் கல்லூரி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு மாணவ, மாணவியரும், ஒரு தரப்பு ஆசிரியர்களும் வந்தனர். ஆனால் வகுப்பறைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து மரத்தடிகளையே வகுப்பறைகளாக்கி போதனை நடந்து
வருகிறது.
மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் படிக்க வருவதாக துணை முதல்வர் அன்புத்துரை தெரிவித்தார். வகுப்பறைகள் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நேற்று மாணவ, மாணவியர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதுகுறித்து மாணவி திவ்யா என்பவர் கூறுகையில், தற்போது மாணவர்களாகிய நாங்கள் படிப்பதற்கு ஆர்வத்துடன் உள்ளோம். பரீட்சை நெருங்கி வருகிறது. ஆனால் வகுப்பறைகள் திறக்கப்படவில்லை. இதனால்மரத்தடிகளில் அமர்ந்து படித்து வருகிறோம்.
முதலில் கல்லூரி வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸாரை அகற்ற வேண்டும். பிரச்சினைக்கு முக்கிய காரணமே அவர்கள்தான். தேவையில்லாமல் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர், வழக்குகளும் போடப்பட்டுள்ளன. போலீஸாரை வெளியேற்றினால்தான் கல்லூரியில் சகஜ நிலை திரும்பும்.
அதேபோல பிரச்சினை செய்வோரை அவர்கள் இப்போதைய முதல்வரின் ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி, முன்பு இருந்தவரின் ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்களையும் கல்லூரிக்குள் விடக் கூடாது.
எங்களுக்கு படிப்புதான் முக்கியம். நாங்கள் படிக்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்குப் பாடம் எடுக்க ஆசிரியர்களும் தயாராக உள்ளனர். எனவே உடனடியாக முழு அளவில் கல்லூரியைத் திறக்க ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளோம்.
கல்லூரியை பூட்டி வைப்பதால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. எனவே, கல்லூரியை பூட்டி வைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications