குடிகாரத் தந்தையை அடித்துக் கொன்றார் மகள்
ஆறுமுகநேரி: வீட்டில் இருந்து 50 ரூபாயை எடுத்து சென்று குடித்துவிட்டு, தன்னை கொல்ல வந்த தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்தார் மகள். அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி அருகேயுள்ள காயல்பட்டிணம் லட்சுமிபுரத்தை சேர்ந்த தம்பதி சின்னத்துரை-சவுரியம்மாள். இவர்களது ஒரே மகள் செல்வராணி. செல்வராணியை அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமாருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு 5 வயதில் திவ்யா என்ற மகள் உள்ளார். செல்வகுமார் ஏற்கனவே திருமணமானவர். சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வகுமார் பிரிந்து சென்றுவிட்டார். மீண்டும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் செல்வராணி தாய் சவரியம்மாளுடன் வசித்து வந்தார். சின்னத்துரை ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு மனைவி, மகளுடன் சண்டை போட்டு வந்தார். சவுரியம்மாளும், செல்வராணியும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்து வந்தனர்.
இந்நிலையில் செல்வராணி வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 ரூபாயை, சின்னதுரை எடுத்துச் சென்று குடித்து விட்டு வந்தார். பணம் எங்கே என்று சின்னதுரையிடம் செல்வராணி கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சின்னதுரை செல்வராணியின் கழுத்தை பிடித்து நெரிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி அருகில் கிடந்த கட்டையை எடுத்து சின்னதுரையை தலையில் அடித்தார். இதில் சின்னதுரை தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராணி, சின்னதுரையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதுரை இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வராணியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications