திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: அதிமுக எம்எல்ஏ மீது வழக்கு
மதுரை: திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக எம்எல்ஏ போஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் விரைவில் கைது செய்யக்கூடும் என்று தெரிகிறது.
திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ போஸ். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் செலவுக்காக திமுக கவுன்சிலர் செல்லத்துரையிடம் ரூ.11 லட்சத்து 57,000 கடனாக வாங்கியுள்ளார்.
குறிப்பட்ட தேதியில் கடனை திருப்பித் தராததால் எம்எல்ஏ போஸ் மீது மதுரை நீதிமன்றத்தில் செல்லத்துரை வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ரூ.4 லட்சத்து 4,000த்தை மட்டும் போஸ் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடனை திருப்பிதர மறுப்பதோடு, அடிக்கடி பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று போஸ் மிரட்டுவதாக நீதிமன்றத்தில் செல்லத்துரை மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி, அதிமுக எம்எல்ஏ போஸ் மீது வழக்கு தொடரும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து திலகர் திடல் போலீசார் போஸ் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications