நெல்லை அருகே லாரி மீது ரயில் மோதியது - டிரைவர் காயம்
நெல்லை: நெல்லை அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி மீது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் படுகாயமடைந்தார். லாரி 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்று காலை நெல்லை தாழையூத்து அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.
அங்கு உள்ள ஆள் இல்லாத ரயில்வே கேட் வழியாக கல்குவாரிகளுக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் சென்று வரும். இந்த ரயில்வே கேட்டை இன்று காலை 7.30 மணியளவில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக ஒரு லாரி வேகமாக வந்தது. இதை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக என்ஜினை ஆப் செய்து ரெயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் லாரியின் பின்புறத்தில் ரயில், மோதியது.
இதில் லாரி தூக்கி வீசப்பட்டது. லாரியில் இருந்த டிரைவர் ராஜாவும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் ராஜாவை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில் என்ஜின் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்த முயன்றதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்கள்.
தகவலறிந்த நெல்லை ரயில்வே போலீசார், ரயில் நிலைய மேலாளர் கல்யாணி உள்பட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சரி செய்தனர்.
இதனால் இன்று நெல்லை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகின. விபத்தில் சிக்கிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு நெல்லை ஜங்ஷனுக்கு வந்தது. என்ஜின் பரிசோதனை செய்யப்பட்டு 9.20 மணியளவில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது.