தமிழக நகரங்களில் மின்வெட்டு தற்காலிகமாக ரத்து
சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு ஏற்படவில்லை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இது நிரந்தரமாகுமா அல்லது மீண்டும் மின் வெட்டு வருமா என்ற அச்சமும் மக்களிடையே நீங்கவில்லை.
தமிழகத்தில் பல மாதங்களாகவே மின்பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. பின்னர் முறைப்படி நேரம் அறிவித்து மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி சென்னை போன்ற மாநகரங்களில் ஒன்றரை மணி நேரமும், நகராட்சிப் பகுதிகளில் 3 மணி நேரமும், பிற பகுதிகளில் 5 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
மின்வெட்டுக்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் நிலவி வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மின்வெட்டுக்கு கண்டனம் ெதரிவித்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னையிலும், புறநகர்களிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. வழக்கம் போல கரன்ட் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல தமிழகத்தின் சில தொழில் நகரங்களிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. இதுகுறித்து மின்வாரிய தரப்பில் கூறுகையில், தற்போது காற்றாலை மின்சாரம் வந்து கொண்டிருப்பதால் சில முக்கிய நகரங்களில் மின்வெட்டை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறோம். சென்னை, கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் மின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற பகுதிகளில் 5 மணி நேர மின்வெட்டு 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேர மின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மற்ற கட்டுப்பாடுகளில் மாற்றம் இல்லை. கிடைக்கிற மின்சாரத்தை வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சாரம் கிடைத்தால், இந்த நிலையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
மின்வெட்டு தற்காலிகமாக நீங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது இப்படியே தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது. மீண்டும் மின்வெட்டு வருமோ என்ற அச்சமும் ஒரு ஓரத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications