அக்டோபரில் கொடி!-அரசியலுக்கு ரஜினி ரெடி??

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் படியாக, தனது மன்றத்தின் அதிகாரப்பூர்வமான கொடியை அக்டோபர் சந்திப்பின்போது ரஜினி அறிவிக்க உள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டுக்கு முன்பும் பின்பும், அவை வென்றாலும் தோற்றாலும் தவறாமல் விவாதிக்கப்படும் விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா...
வழக்கமாக இந்தக் கேள்வி படம் ரிலீசான சில வாரங்களில் கரைந்து போகும். கேள்விக்கு பதிலும் கிடைக்காது.
இந் நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதாகவும், அதற்குள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மன்றத்தினரின் எண்ணிக்கை, குறித்த முழு விவரங்களையும் திரட்டி வைக்குமாறு ரஜினி கூறியுள்ளதாக இப்போது கிளப்பி விடுகிறார்கள்.
சினிமாவிலும் மேடைகளிலும் அரசியலுக்கு வரப் போவது மாதிரி பூடகமாகப் பேசிப் பேசியே தனது ரசிகர்களை எப்போதும் ஒரு ஆர்வத்தில் நிறுத்தி வைத்திருந்தார் ரஜினி. அவர் பேசாதபோது அவருக்கு மிக வேண்டிய சோ மாதிரியானவர்கள் ரஜினி அரசியலுக்கு வரனும், வருவார் என்று அவரைப் போலவே பேசுவதும், எழுதுவதும் வழக்கமாக இருந்து வந்தது. இதனால் இதோ வருவார்.. அதோ வருவார் என்று ரசிகர்களும் நம்பிக் கொண்டே இருந்தனர்.
ஆனால், ரஜினிக்குப் பின்னால் வந்த விஜயகாந்த் அதிகம் பேசாமல் நச்சென்று கட்சியை ஆரம்பித்து 8 சதவீத ஓட்டுகளையும் வாங்கிக் காட்ட ரஜினி ரசிகர்கள் பொறுமை இழந்தனர். அடுத்து சரத்குமாரும் அரசியலுக்கு வந்துவிட, ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நினைத்த அவரது ரசிகர்கள் மேலும் பொறுமையை இழந்தனர். அடுத்து சிரஞ்சீவியும் சொன்ன 6 மாதத்தில் அரசியலுக்கு வந்துவிட ரஜினி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எரிச்சல்.
இந் நிலையில் குசேலன் படத்தில் தான் அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்பது போன்ற வசனங்களை வைத்திருந்தார். இது அவரது பல ஆண்டு கால தீவிர ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. இது தற்போது ரஜினிக்கும் புரிந்துவிட்டது என்கிறார்கள்.
தனது செல்வாக்கு, ரசிகர் மன்ற பலம், மக்களுக்கு தன் மீதுள்ள அபிப்பிராயம் போன்றவற்றை அனைவருக்கும் பறைசாற்றும் விதத்தில் ஒரு புதிய முடிவை இன்னும் ஒரு மாதத்துக்குள் ரஜினி அறிவிக்கப் போகிறார் என பரபரப்பாக, வழக்கம் போல, மீண்டும், இப்போது செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.
அக்டோபர் கூட்டத்தில் தலைவர் மகிழ்ச்சியான முடிவை உங்களுக்குத் தெரிவிப்பார் என்று ரசிகர் மன்றத்தினரிடம் கூறியுள்ளார் சத்யநாராயணா என்கிறார்கள்.
புதிய கொடி:
மேலும் அந்தக் கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்ட பிறகு, முதல் வெள்ளோட்டமாக தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியை அறிமுகப்படுத்துவார் என்கிறார்கள்.
இந்த தகவல்களில் எது உண்மை எது பொய் என்பது ரஜினிக்கு மட்டுமே தெரியும். ஆனால், இந்த தகவல்கள் தமிழக அரசியல் கட்சிகளின் முதுகுத் தண்டுகளில் ஐஸ் பாய்ச்சியிருப்பது என்னவோ நிஜம்.












Click it and Unblock the Notifications