டிஎஸ்பி மீது ஜெ பாய்ச்சல்-'ஆள் கடத்தலுக்கு உதவினார்'
சென்னை: சாத்தனூர் அணை திட்டக்குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை இடதுபுற கால்வாய் நீரைப் பயன்படுத்துவோர் பாசன சங்கத் தலைவர்கள் 27 பேரும், விழுப்புரம் மாவட்டம், சாத்தனூர் அணை வலதுபுறக் கால்வாய் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் 22 பேரும் 2004ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களிலிருந்து திருவண்ணாமலை மாவட்ட இடதுபுறக் கால்வாய் பகிர்மானக் குழுத் தலைவர்களாக ஒன்பது பேரும், வலதுபுறக் கால்வாய் பகிர்மானக் குழுத் தலைவர்களாக எட்டு பேருமாக மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 17 பகிர்மானக் குழுத் தலைவர்களிலிருந்து, திட்டக்குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல், கடந்த 4ம் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் அதிகாரியாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் தர்மலிங்கமும், திமுக சார்பில் ஜெயராமனும் போட்டியிட்டனர். இதில், தர்மலிங்கத்துக்கு ஆதரவாக ஓட்டளிக்க வந்த ரத்தினவேலுவை டிஎஸ்பி வீரராகவன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும், அவரை திமுகவைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் கடத்திச் செல்வதற்கும் உதவியாக இருந்திருக்கிறார். இதேபோல் மொட்டையன் என்பவரையும் ஓட்டளிக்க விடாமல் மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால், அதிமுக வேட்பாளர் வெற்றி பறிக்கப்பட்டு இருக்கிறது.
கட்சி சார்பற்ற முறையில் நடக்கும் தேர்தலில்கூட வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அராஜகத்தை அரங்கேற்றியிருக்கும் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, இந்தத் தேர்தல் மோசடியை எதிர்த்து அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications