வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்தினருக்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கோரியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
2001ம் ஆண்டு திமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் வன்னியர் அறக்கட்டளை வாரியம் அறிவிக்கப்பட்டது. அதற்கு தனி அதிகாரியாக இப்போதைய தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த வாரியம் அறிவிக்கப்பட்டு 7 வருடங்களாகியும் செயல்படவில்லை.
இப்போது விசாரித்ததில் அரசு அதை கைவிட்டு விட்டதாகத் தெரிய வந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். வன்னியர் நல வாரியத்தை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மிக அதிகமாக உள்ளவர்கள் வன்னியர்கள் தான். இந்த சமுதாயத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் 15 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இட ஒதுக்கீடு மூலம் எந்தெந்த சமூகத்திற்கு என்னென்ன பலன் கிடைத்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கையும் வெளியிடப் படவேண்டும்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வன்னிய சமுதாயத்தை புறக்கணித்து வருகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வந்த எம்.கிருஷ்ணசாமி நீக்கப்பட்டுள்ளார்.
அதே போல, வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள புதுவை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியிலிருந்த ரங்கசாமியும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வன்னிய சமுதாயத்தை புறக்கணித்து வருகிறது.
முதல்வர் கருணாநிதியும் வன்னியர்களை புறக்கணித்து வருகிறார். இந்த கட்சிகள் தொடர்ந்து வன்னியர்களை புறக்கணித்தால் வரும் தேர்தலில் அந்த கட்சிகளை வன்னியர்கள் புறக்கணிப்பார்கள்.
நிர்வாக வசதிக்காக வட தமிழகம், தென் தமிழகம் என்று தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
அமைச்சரவையிலும், நீதித் துறையிலும், அரசு உயர் பதவிகளிலும் வன்னியர்களுக்கு தனி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் இரண்டு வன்னியர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்றார் நடராஜன்.
சேலம் கந்தம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தலித் மக்கள் கோயிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டதால், அந்த கிராமத்தைச் சேர்ந்த வன்னியர்கள் குடும்பங்களோடு ஊரை விட்டு வெளியேறியது குறித்து கேட்டதற்கு,
இது தொடர்பாக ஒரு குழு சேலத்திற்கு சென்று வன்னிய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications