இலங்கைக்கு ராணுவ உதவி: ராமதாஸ் கடும் கண்டனம்
நெல்லை: இலங்கையில் தொடர்ந்து கடும் துயரத்தில் தவித்துவரும் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியம் செய்துவரும் இலங்கைக்கு மத்திய அரசு ராணுவ உதவி அளிப்பது கண்டிக்கத்தக்கது. இதை உடனே நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நெல்லையில் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறை மாற வேண்டும். இலங்கைக்கு ராணுவ உதவி கிடையாது என்று சொல்லிக் கொண்டே, மறைமுகமாக ராணுவ உதவி அளித்து வருவதை நிறுத்த வேண்டும்.
இலங்கைக்கு இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என்ற பாகுபாடு கிடையாது. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே விரோதிகள்தான்.
இரு தினங்களுக்கு முன் வவுனியாவில் நடந்த தாக்குதலில் இலங்கை ராணுவத்துக்காக ரேடார் கருவியை இயக்கிவந்த இந்திய ராணுவத்தினர் காயமடைந்த செய்திக்குப் பிறகுதான் இந்தியாவின் இன்னொரு முகம் வெளியில் தெரிந்துள்ளது.
இது தமிழர்களுக்கு எதிரான செயல் என்பதிலே எள்ளளவும் சந்தேகமில்லை. உடனடியாக இலங்கைப் போர் முனையில் உள்ள இந்திய ராணுவப் பொறியாளர்கள் மற்றும் இதர பிரிவினரை திரும்ப அழைக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் வழங்காது, எதிர்காலத்தில் வழங்கவும் மாட்டோம் என்று தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.
இதுவரை தமிழக முதல்வர் மெளனமாக இருந்தது போதும். இனியாவது இந்த விஷயத்தில் மத்திய அரசை கடுமையாக நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு இறங்காமல் பார்தச்துக் கொள்ள வேண்டும். சிங்கள அரசுக்கு அவர்களுக்குப் புரிகின்ற மொழியிலேயே பதிலடி தர வேண்டும்.
இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடத்தல்காரர்களுக்கு லாபம்:
தமிழகத்தில் அரிசி விலை 1 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பால் சாதாரண மக்களுக்கு மாதத்துக்கு ரூ.20 மட்டும்தான் நிவாரணம் கிடைக்கும். மற்றபடி இது கடத்தல்காரர்களுக்குத்தான் சாதகமாக முடியும்.
திமுக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மதுவெள்ளம் ஆறாக ஓடுகிறது.
அரசியல் சட்டம் 47-ஐப் பயன்படுத்தி மதுப் பழக்கத்தை குறைக்கிற நடவடிக்கைகளை அரசு மேற்கெள்ள வேண்டும். இதற்கு முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா 1991-ல் கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தினாலே போதும்.
அந்த சட்டம், கள்ளச்சாராயம், மது விற்கும் பகுதியில் உள்ள விஏஓ, சப் இன்ஸ்பெக்டர் போன்றோரை முதல் முறை எச்சபரிப்பது, இரண்டாவது முறை சஸ்பெண்ட் செய்வது, மூன்றாம் முறை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்துகிறது. இதைக் கடுமையாக அமல்படுத்தினாலே கள்ளச் சாராயப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications