நானோவுக்கு நிலம்-50% கூடுதல் இழப்பீடு-மே.வ அரசு
கொல்கத்தா: டாடா கார் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதாக மேற்கு வங்க அரசு விளம்பரப்படுத்தியுள்ளது. இதை டாடா நிறுவனம் வரவேற்றுள்ளது. ஆனால் மம்தா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ தொழிற்சாலை அமைக்க பெறப்பட்ட நிலத்தில் 300 ஏக்கரை விவசாயிகளிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி திரணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி போர் கொடி உயர்த்தினார். இதுதொடர்பாக நடந்த முதல் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது, பின்னர் மீண்டும் பிரச்சனையானது. இதையடுத்து நடந்த இரண்டாவது பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அரசு அறிவித்த இழப்பீட்டுடன் கூடுதலாக 50 சதவீத இழப்பீடு வழங்கப்படும். மேலும் இதில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் 300 நாள் வேலைக்கு வாய்ப்புத் தரப்படும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறுகையில், இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்வுகாணவே இந்த அரசு விரும்புகிறது. தனிப்பட்ட ஈகோ இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்படுத்தாது. அரசும், இத்திட்டத்தை எதிர்ப்பவர்களும் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலனில் செயல்பட வேண்டும். அரசின் முடிவை மம்தா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மக்களின் ஆதரவை பெறும் வகையில் இன்று பேரணி நடத்த அரசு முடிவு செய்துள்ளது
அரசின் இந்த அறிவிப்பு டாடா நிறுவனத்தை திருப்திபடுத்தியுள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தொழிற்சாலை பணிகள் எப்போதும் தொடங்கும் என்பதை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனினும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் இந்த முடிவை ஏற்க மம்தா மறுத்துவிட்டார். இரண்டாவது முறையாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் போராட்டம் தொடரும் என்று சனிக்கிழமையே மம்தா அறிவித்தார்.
இந்நிலையில், அரசு நேற்று விளம்பரம் வெளியிட்டதை அடுத்த மம்தா, நாளை மீண்டும் பேரணி நடத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications