நாய் கடித்ததால் பசுவுக்கு வெறி: பால் குடித்த மக்கள் பீதி!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வெறி நாய் கடித்த பசு மக்களை முட்டத் தொடங்கியதால் அதை கிராமத்தினர் கஷ்டப்பட்டு பிடித்து கட்டிப் போட்டனர். இந்த மாட்டின் பாலை குடித்த மக்கள் பீதியடைந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகில் உள்ள நீடூர் கிராமத்தைச் ேசர்ந்த ஒரு விவசாயிக்குச் சொந்தமான பசு மாட்டை கடந்த மாதம் வெறிநாய் ஒன்று கடித்தது. இதையடுத்து அந்த மாட்டுக்கு ரேபிஸ் வைரஸ் தாக்கியது.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து வந்த அந்த மாடு கடந்த சில நாட்களாக போகிறவர்கள், வருகிறவர்களை எல்லாம் முட்டத் தொடங்கியது. இதையடுத்து கால் நடை மருத்துவர்களுக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
ஊர் மக்களின் உதவியுடன் அந்த மாட்டை கஷ்டப்பட்டு கட்டிப் போட்ட டாக்டர்கள் மாட்டைப் பரிசோதித்த போது மாட்டுக்கு ரேபிஸ் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதை கண்டறிந்தனர். அந்த மாடு இன்னும் ஓரிரு நாட்களில் இறந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஊர் மக்கள் அந்த மாட்டை கண்காணித்து வருகின்றனர். மாட்டின் உமிழ் நீரை யாரும் தொட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பசு மாட்டிலிருந்த கறந்த பாலை அருந்திய மக்கள் தங்களுக்கும் ரேபிஸ் தாக்கி விடுமோ என்ற பயத்தில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் நீடூரில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications