உறுதிமொழி-'பொறுக்க முடியாமல்' கிளம்பிய அமைச்சர்
கோவை: அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, விழா முடியும் முன்பே கிளம்பிச் சென்றது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
கோவை மாவட்ட திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 9.00 மணிக்கு பேரணி நடந்தது. வடகோவை திமுக அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு, அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ராமநாதன், மாநகர செயலர் வீரகோபால், முன்னாள் எம்.பிக்கள் சுப்பையன், மோகன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பேரணி, பவுர் ஹவுஸ், டாடாபாத், 100 அடி ரோடு, சக்தி ரோடு வழியாக காந்திபுரத்தை அடைந்தது. அங்கு ஈ.வெ.ரா., சிலைக்கு முதலில் மாலை அணிவித்த அமைச்சர் பழனிசாமி, திருவள்ளுவர் பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் பழனிசாமி பேசினார். தனது பேச்சை முடித்த பின்னர், திமுக, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ராமநாதன் அண்ணாதுரை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உறுதிமொழி வாசிப்பார்; அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராமநாதன் உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கினார். 10 பக்கத்திற்கும் மேற்பட்ட உறுதிமொழியை தொடர்ந்து ராமநாதன் வாசிக்க, மேடைக்குக் கீழ் இருந்த திமுகவினர் வெயில் தாங்க முடியாமல், பொறுமையிழந்து கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.
ஆனாலும் விடாமல் ராமநாதன் உறுதிமொழியை வாசித்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியே மேடையிலிருந்து இறங்கிச் சென்று விட்டார். இருந்தாலும் ராமநாதன் விடுவதாக இல்லை. தொடர்ந்து உறுதிமொழியை வாசித்தபடி இருந்தார்.
ஒரு வழியாக 12.30 மணியளவில் அவர் உறுதிமொழியை வாசித்து முடித்து நிறுத்தினார். அத்துடன் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
தொண்டர்கள்தான் வெயில் தாளாமல் கலைந்தார்கள். அமைச்சராவது அண்ணா பிறந்த நாள் விழா உறுதிமொழியை முடிக்கும் வரை இருந்திருக்கலாமே!












Click it and Unblock the Notifications