வேலைக்கார பெண் எரித்து கொலை-மார்வாடி பெண் கைது
சென்னை: வீட்டில் வேலை பார்த்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சூளைமேடு சங்கராபுரம் 2வது தெருவில் உள்ள சீனிவாசா அபார்ட்மெண்டில் வசிப்பவர் சுதீர் ராம்சந்த். மார்வாடியான இவர் இரும்பு ஏற்றுமதி செய்து வருகிறார். வட்டிக்கும் பணம் கொடுத்து வருகிறார்.
இவரது மனைவி பிரியா (30). இவர்களது வீட்டில் சேத்துப்பட்டைச் சேர்ந்த பரமேஸ்வரி (35) வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக தினமும் காலையில் வேலைக்கு வந்துவிட்டு இரவு சமையலையும் முடித்துவிட்டுச் செல்வார்.
இவர் சுதிர் ராம்சந்திடம் கடன் வாங்கியுள்ளார். அதை சம்பளத்தில் கழித்துக் கொண்டதால் மீண்டும் கடன் வாங்கியுள்ளார் பரமேஸ்வரி.
இந் நிலையில் தான் கொடுத்த கடனுக்கு வட்டியும் கேட்டுள்ளார் சுதீர்ராம்சந்த். இதையடுத்து வேலைக்கு செல்வதை பரமேஸ்வரி தவிர்த்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலை பரமேஸ்வரியின் வீட்டுக்கு சென்ற சுதிர்ராமின் மனைவி பிரியா, கடன் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம். வீட்டு வேலை வா என்று அழைக்கவே உடன் சென்றார் பரமேஸ்வரி.
நேற்றிரவு சமையல் அறையில் இருந்த பரமேஸ்வரியிடம் மீண்டும் கடன், வட்டி குறித்து பிரியா பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது பரமேஸ்வரியின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி, சேலை முந்தானையை எடுத்து எரிந்து கொண்டிருந்த ஸ்டவ் அடுப்பு மீது பிரியா வீசியுள்ளார். இதையடுத்து பரமேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்துக் கொண்டது. அது உடலிலும் பரவவே, துடித்தபடியே சமையல் அறைக்குள் ஓடி, உடல் வெந்து அங்கேயே நிலை குலைந்தார் பரமேஸ்வரி.
பரமேஸ்வரியின் அலறல் குரல் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த திருவல்லிக்கேணி துணைக் கமிஷனர் லட்சுமி, நுங்கம்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி, சூளைமேடு இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவிட்டு பரமேஸ்வரியிடம் வாக்குமூலம் வாங்கினர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் பரமேஸ்வரி மரணமடைந்தார்.
வாக்குமூல விவரம்:
அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,
சுதீர்ராம் சந்த்திடம் நான் ரூ. 4,000 தான் வாங்கினேன். ஆனால் வட்டியோடு சேர்த்து நான் ரூ.15,000 தர வேண்டும் என சேட்டின் மனைவி பிரியா மிரட்டினார்.
நேற்று சமையல் வேலைகளை முடிக்கும் நேரத்தில் வந்து பிரியா வாக்குவாதம் செய்தார். திடீரென என் மீது மண்ணெண்ணெயை ஊற்றி, சேலையில் தீ பிடிக்க வைத்து விட்டார் என்று கூறியுள்ளார் பரமேஸ்வரி.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரியா மீது சூளைமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications