தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குவேன்: சிரஞ்சீவி
ஹைதராபாத்: எங்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமையும்போது மக்கள் விரும்பினால், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவரை கண்டிப்பாக முதல்வராக்குவேன் என்று கூறியுள்ளார் பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அடுத்த சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர்தான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால், நிச்சயமாக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராவதற்கு வழிவிட தயக்கம் காட்ட மாட்டேன்.
தெலுங்கு தேசம், காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளை காட்டிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சி வாய்ப்பு அளிக்கும். பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை உயருவதற்கு பாடுபடுவேன்.
தெலுங்கானா பிரச்னையை இரண்டு வகையாக பார்க்கிறேன். முதலில் அந்த பகுதிகளில் வாழும் மக்களின் சுய மரியாதை. இரண்டாவது, சமத்துவமான வளர்ச்சி பணிகள். இந்த பிரச்னையை பொறுத்தவரை மக்களின் முடிவுதான் இறுதியாக இருக்க வேண்டும்.
தெலுங்கானா பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு அதிகமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
எங்கள் கட்சியில் ஊழல் கறை படிந்த அரசியல் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடையாது. எங்கள் கட்சியில் இணைந்துள்ள சில தலைவர்கள் மீது சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றார் சிரஞ்சீவி.