அன்புமணி குற்றச்சாட்டு-கருணாநிதி மறுப்பு
சென்னை: மத்திய அமைச்சர் அன்புமணி, ஆதாரமில்லாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுவது நல்லதல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தாம்பரம் சித்த மருத்துவமனையில் மூலிகை பண்ணைக்கு 5 ஏக்கர் நிலத்துக்கு ரூ.25 கோடியை தமிழக அரசு கேட்பதாக மத்திய அமைச்சர் அன்புமணி குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பேரி கிராமத்தில் தேசிய சித்தா நிறுவத்துக்கு வழங்குவதற்காக எம்ஜிஆர் பல்கலையிடம் இருந்து திரும்பப் பெற்று நிலக்கிரயம் இன்றி நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் கடந்த 30.9.2004 முதல் தேசிய சித்தா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தற்போது அந்த நிறுவனம் மருந்து ஆய்வுக்கூடம் கட்டுவதற்கு உத்தேசித்துள்ளது. அதனால் மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் தமிழக அரசிடம் இருந்து 5 ஏக்கர் நிலம் கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகிய இருவரிடையே உள்ளது.
இறுதியாக கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பின் என்னுடைய இறுதி உத்தரவு அதில் இடப்பட வேண்டும். இந்நிலையில் ஏதோ ரூ.25 கோடி கேட்டிருப்பதாக அமைச்சர் கூறுவது எந்த அடிப்படையில் என்பது தெரியவில்லை. பொத்தாம் பொதுவில் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.