பேரைக் கெடுக்க அவதூறு-ஆற்காடு வீராசாமி
சென்னை: நான் அடியாட்களை அனுப்பி நிலத்தைப் பறிக்க, ரகளை செய்ய வைத்ததாக வெளியாகியுள்ள புகார் அவதூறானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மறுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் வசித்து வரும் முருகேசன் (62) என்ற கட்டடத் தொழிலாளி தனது குடும்பத்தாருடன் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை வாங்கிய இடத்தில் தனது குடும்பத்தினருடன் இருந்து வருவதாகவும், இப்போது அந்த இடத்தை அபகரிக்க சந்திரசேகர் மற்றும் அவரது தம்பி பிருத்விராஜ் ஆகியோர் முயல்வதாகவும், அவர்கள் அனுப்பிய அடியாட்கள் தங்களது நிலத்ைதப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மரங்களை வெட்டித் தள்ளியதாகவும், புல்டோசரைக் கொண்டு காம்பவுண்டு சுவரை இடித்து விட்டதாகவும், இதுகுறித்து கேட்டபோது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்லித்தான் செய்கிறோம் என்று மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் புகாரை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அடியோடு மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அவர் மறுப்பு மனுவை அனுப்பியுள்ளார். அதில், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி. நிலத்தைப் பறிக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது தவறானது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.
மேலும், இந்த அவதூறை பரப்பியவர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள் மீது வழக்கு போடப்படும் எனவும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications