என்.கே.கே.பி. ராஜா மீதான ஆள்கடத்தல் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: ஆள் கடத்தல், அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து நிலத்தைப் பறிக்க முயன்றது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன் ஆகியோரை முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆட்கள் கடத்தி, கொலை மிரட்டல் விடுத்து நிலத்தைப் பறிக்க முயன்றதாக பழனிச்சாமியின் உறவினர்கள் இளங்கோவன், சுந்தரமணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து ராஜாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், கடத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானதால் ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால் இதை எதிர்த்து பழனிச்சாமியும், குகமணியும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில், கடத்தப்பட்ட சிவபாலன் இன்னும் ராஜாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார். இந்த நிலையில்,இந்த வழக்கை பைசல் செய்தது சரியல்ல. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவின் ஆட்கள் 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இதையடுத்து இந்த 3 பேர் உள்பட முன்ஜாமீன் பெற்றிருந்த 7 பேரின் முன்ஜாமீனை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 39 பேர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இதை எதிர்த்தும் பழனிச்சாமி, குகமணி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரகுபதி இன்று தீர்ப்பளித்தார். அப்போது 39 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ராஜா மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவிட்டார்.
ராஜாவைக் காப்பாற்ற காவல்துறையில் சிலர் தீவிரமாக முயன்றுள்ளனர். அவர்கள் யார் என்பதையும் சிபிசிஐடி போலீஸார் கண்டறிய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications