இந்திய வங்கிகளுக்கு பாதிப்பில்லை-ப.சிதம்பரம்
டெல்லி: இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி இருப்பு நிலைமை வலுவாக இருப்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பிரபலமான லேமென் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலாகி விட்டது. இதனால், இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய விவகாரங்களை ஆராய மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் ப.சிதம்பரம் கூறியதாவது:
லேமென் பிரதர்ஸ் திவாலானதால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வலுவாகவும் ஸ்திரமாகவும் உள்ளன. லேமென் பிரதர்ஸ் நிறுவனம் பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி கவர்னரும், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரும் எனக்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி மத்திய அரசின் நிதி நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்திய வங்கிகளின் இருப்பு நிலை நல்ல முறையில் உள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்காக 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்காக 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.1,260.8 கோடியில் ஸ்காலர்ஷிப் திட்டம் தொடங்கப்படுகிறது. இதனால் 5 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பலனடைவார்கள்.
எச்.எம்.டி. (வாட்ச்) லிமிடெட், இந்துஸ்தான் கேபிள் லிமிடெட், பாரத் வேகான் என்ஜீனியரிங் கம்பெனி லிமிடெட் போன்ற நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவ ரூ.79.7 கோடி அளிக்கப்படும் என்றார் சிதம்பரம்.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள பிற முடிவுகள் குறித்து அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில்,
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பாக மொகாலி நகரில் நானோ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்' அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.142.45 கோடி செலவில் இந்த நிறுவனம் அமைக்கப்படும்.
பாசுமதி அரிசி போன்ற முக்கிய விளைபொருட்கள் மற்றும் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்கவும் உணவு தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-மாலத்தீவு இடையே விமானங்களை இயக்குவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், பிரான்சில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக அந்த நாட்டுடன் செய்து கொண்ட சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்றார் தாஸ்முன்ஷி












Click it and Unblock the Notifications