சேது: கருணாநிதிக்கு மெளனம் ஏன்?-சிபிஎம்
வேலூர்: தமிழகத்தின் உயிர்நாடியான சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து முதல்வர் கருணாநிதி மெளனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.மு. கூட்டணி அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. தொழில்துறை நெருக்கடியையும், கிராமப் பொருளாதாரம் சீரழிந்தும் வருகிறது.
தமிழகத்தில் இலவச மனை பட்டா கேட்டு 30 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அரசோ வெறும் 3 லட்சம் பேருக்குத் தான் பட்டா வழங்கியுள்ளது.
பெரியார், அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் இதே வேளையில் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை அதிகரித்து வருகிறது.
அண்ணா நூற்றாண்டு விழாவில் கவிதை படிக்கிறார். அணு சக்தி ஒப்பந்தம் பற்றியும் கவிதை படிக்கிறார். ஆனால் சேதுகால்வாய் திட்டத்தில்உறுதியான முடிவு எடுக்காமல் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன், அதை கருணாநிதி கேட்காமல் மெளனம் காப்பது ஏன்?.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் உறவு வைத்துள்ள எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications