தர்மபுரியில் முகலாயர் தங்க நாணயங்கள் சிக்கின
தர்மபுரி: முகலாய சாம்ராஜ்யத்தை சேர்ந்ததாக சந்தேகப்படும் 131 தங்க நாணயங்களும், ஒரு ஜோடி தங்கத் தோடும் தர்மபுரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் கல்குண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடு மாது (40). இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்த கணவனும், மனைவியும் அந்த இடத்தில் பள்ளம் தோண்டினர்.
அப்போது தங்க நாணயக் குவியல் இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்தனர். உடனடியாக அவற்றை வெளியே எடுத்தனர். மொத்தம் 131 தங்க நாணயங்களும், ஒரு ஜோடி தங்கத் தோடும் அதில் இருந்தன.
இதுகுறித்து பாலக்கோடு தாசில்தார் டியூக் பால்ராஜுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அதிகாரிகளுடன் விரைந்து வந்தார்.
நாணயங்களையும், தோடுகளையும் கைப்பற்றினார். நாணயங்களில் உருது எழுத்துக்கள் காணப்படுகின்றன. எனவே இவை முகலாய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாணயமும் தலா 6 கிராம் எடையில் உள்ளன. இந்த நாணயங்களையும், தோடுகளையும் இந்திய பொக்கிஷ சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த தாசில்தார் இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications