திமுக செயலர் கொலை-6 பாமகவினர் கைது
சென்னை: சென்னை அருகே வானகரத்தில் திமுக செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாமகவைச் ேசர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வானகரம் ஓட மாநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேலாயுதம். இவர் தி.மு.க. மாவட்ட விவசாய பிரிவு செயலாளராக இருந்தார்.
வானகரம் ஊராட்சி அ.தி.மு.க. உறுப்பினர் பவானி இறந்ததை தொடர்ந்து அங்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க.சார்பில் கிருஷ்ணவேணி, பா.ம.க.சார்பில் சிவகாமி ஆகியோர் போட்டியிட்டனர்.
வானகரம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்கு சாவடியில் ஓட்டுப்பதிவு நடந்தது. தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக சண்முக வேலாயுதம் தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் சண்முகவேலாயுதம் தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்தது. சண்முகவேலாயுதம் காரை நிறுத்தியதும் அவரை அக் கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது.
தலை, மார்பு, முகம் ஆகியவற்றில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
முதல் கட்ட விசாரணையில் சண்முக வேலாயுதத்துக்கும், பா.ம.க.வினருக்கும் ஏற்பட்ட தேர்தல் முன்விரோதம் காரணமாகவே கொலை நடந்தது தெரிய வந்தது.
'அகிம்சை' குமரேசன்:
இதையடுத்து வில்லிவாக்கம் ஒன்றிய பா.ம.க.செயலாளர் செல்வம், வானகரம் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசன், பாபு, ராஜாமணி, கேபிள் மதன், 'அகிம்சை' குமரேசன், அரிஹரன், சுரேஷ், சேகர், முருகன், திருஞானசம்பந்தம், சதீஷ், குமரேசன், ராஜா, பஷீர், மணி ஆகிய 16 பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications