மதுரை தேர்தல் வன்முறை: துணை மேயர், லீலாவதி கொலையாளி மீது வழக்கு
மதுரை: மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தல் வன்முறை தொடர்பாக துணை மேயர் பி.எம். மன்னன், லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவால் விடுதலையான மருது உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் வாக்குப்பதிவின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தேர்தலை எதிர்த்து அதிமுக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், முடிவை அறிவிக்க தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் வன்முறை தொடர்பாக துணை மேயர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துணை மேயர் மன்னன், கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, மருது, எஸ்ஸார் கோபி, மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்து மற்றும் 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் மருது, சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரர்தான் எஸ்ஸார் கோபி.












Click it and Unblock the Notifications