மக்களுக்காக மூட்டை தூக்கலாம்: ஜெ.வுக்கு செல்வகணபதி
சேலம்: திமுகவில் நான் மூட்டை தூக்குவதாக கிண்டல் செய்கின்றனர். மக்களுக்காக மூட்டைத் தூக்குவது கேவலம் அல்ல என்று கூறியுள்ளார் முன்னாள் அதிமுக எம்.பியும், சமீபத்தில் திமுகவில் சேர்ந்தவருமான செல்வகணபதி.
அதிமுகவில் இருந்து சமீபத்தில் செல்வகணபதி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதாவை கடுமையாக சாடி பேசி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் நடந்த ரூ.1 அரிசித் திட்டத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கி வைத்தார். அப்போது செல்வகணபதி அரிசி மூட்டைகளை எடுத்துக் கொடுக்க அதை வாங்கி பயனாளிகளிடம் வீரபாண்டி ஆறுமுகம் வழங்கினார். இதை கடுமையாக கிண்லடித்திருந்தார் ஜெயலலிதா.
இதற்கு செல்வகணபதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இப்போது மானத்தோடும், சுய மரியாதையோடும் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். கூனி குறுகி, வாய் பொத்தி, பல்வேறு ஆசனங்களை போடாமல் இருக்கிறேன்.
நான் மூட்டை தூக்குவதாக கூறி கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கேலி செய்துள்ளார். மக்களுக்காக மூட்டை தூக்குவது கேவலம் அல்ல.
அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர் கருப்புசாமி பாண்டியன், அமைச்சர் ரகுபதி, டெல்லி சிறப்பு பிரநிதி செல்வேந்திரன், விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம், இலக்கிய அணி நிர்வாகி தென்னவன் போன்றவர்கள் எல்லாம் எப்படி உள்ளனர் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியுமா.
திமுகவில் வீரபாண்டியாருக்கு அடுத்தபடியாக பெருமைப்படுத்தப் படுகிறேன். அதிமுகவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொள்வேன், இனியும் அங்கிருந்து காலம் கடத்தி ஒரு குடும்பத்திற்காக வீணாகாதீர்கள் என்று அவர்களை அழைக்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications