Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி தூண்டிவிட்டு வடிவேலு பேசுகிறார்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே, வடிவேலு வீட்டை நான் தாக்கியதாக அவதூறு கிளப்பியுள்ளனர். வடிவேலு மட்டுமல்ல, கருணாநிதியே என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அதை சந்திக்க நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் வடிவேலு வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடந்தது. இதற்கு விஜயகாந்த்தான் காரணம் என வடிவேலு குற்றம் சாட்டியுள்ளார். அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். விருகம்பாக்கம் போலீஸார் விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சன் நியூஸ் டைரக்ட் ரிலே...

இந்த நிலையில் வடிவேலுவின் புகார்களுக்கு இன்று விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக விளக்கமளித்தார். இதை சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.

தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்திற்கு பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள், டிவி செய்தியாளர்கள் குவிந்திருந்தனர்.

விஜயகாந்த் பேசுகையில், எனது தூண்டுதலின் பேரில் தாக்கினார்கள் என்று கூறப்பட்டிருப்பதால் சில விளக்கங்களை நான் சொல்கிறேன்.

கடந்த வரும் எனது தங்கச்சி மாப்பிள்ளை இறந்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். நான் வந்திருக்கலாம். ஆனால் அப்போது ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்டதால் வர முடியவில்லை. அப்போது இங்கே சில பிரச்சினைகள் நடந்து விட்டன (வடிவேலு வீட்டின் மீது விஜய்காந்த் ரசிகர்கள் தாக்கிய சம்பவம்). அதுதொடர்பாக கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.

அப்போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இப்போது நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு நான் போகாதபடி திட்டமிட்டு தாக்கியுள்ளனர் என்று வடிவேலு கூறியுள்ளார். இது அபத்தமான குற்றச்சாட்டு.

கருணாநிதியின் தூண்டுதல் இது...

இது ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் நடந்தது. இது கருணாநிதிக்கு கை வந்த கலை. அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக இப்படி நடந்தார். எம்.ஜி.ஆர். வளர்ந்தது, கட்சியில் அவரது செல்வாக்கு வளர்ந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. சேலத்தில் ராஜேந்திரன் தாக்கப்பட்டார். பிறகு சுகுமாரன் வழக்கு. இப்படி நிறைய பொய் வழக்குகளைப் போட்டவர் கருணாநிதி.

பகடைக் காயாகி விட்டார் வடிவேலு...

கருணாநிதியின் திட்டத்திற்கு வடிவேலு பகடைக் காயாகி விட்டார். அவ்வளவுதான். அதை அவருடைய பேச்சுக்களைப் பார்த்தாலே தெரியும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர் மாறி மாறி பேசுகிறார்.

முதலில் கல்லால் அடித்தார்கள் என்றார், பிறகு 20 பேர் வந்தார்கள் என்றார், பிறகு 30 பேர் வந்தார்கள், ஒரு பைக்கில் நான்கு பேர் வந்தனர் என்றார். பைக் நம்பரைப் பார்க்கவில்லை என்றார். அதாவது ஆளுங்கட்சியினர் சொல்லிக் கொடுக்கக் கொடுக்க அதன்படி பேசுகிறார். தப்பு தப்பாக சொல்கிறார்.

கடைசியில் மாலை 6 மணிக்கு மேல், ஆளுங்கட்சியினர் சொன்னார்களோ என்னவோ, விஜயகாந்த் தூண்டுதல் தான் காரணம் என்கிறார்.

என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வன்முறையான கேஸ், தவறான கேஸ்.

சக நடிகரை தாக்கலாமா என்கிறார். அவர் சக நடிகர் என்றால், எனது தங்கை கணவர் இறந்தபோது நான் இல்லாத நிலையில், அவர் நல்லது செய்திருக்கலாம். அதை செய்யவில்லை. பிரச்சினைதான் செய்தார்.

தேமுதிக இளைஞர் அணி மாநாட்டைத் தடுக்க..

புதுக்கோட்டையில் தேமுதிக மாநாடு நடந்தபோது , நான் மாநாட்டுக்குப் போகக் கூடாது என்பதற்காக எனது நான்கு டிரைவர்களைக் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள்.

இப்போதும் கூட அடுத்த மாதம் நடக்கப் போகும் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டைத் தடுக்கவும், கெடுக்கவுமே இந்த சீப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளார் கருணாநிதி.

எனது கட்சி வளருகிறது என்று அவருக்கு கோபம். மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன் வந்து பார்த்து விட்டாரே என்ற ஆத்திரம். விஜயகாந்த் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்து விட்டானே என்று அவருக்கு பல வகையிலும் யோசனை.

அவர் எப்போதும் நேர் வழியில் மக்களை சந்தித்ததில்லை. குறுக்கு புத்திதான் அவருக்கு நிறைய வேலை பார்க்கும்.

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது ஆட்சியை என்னிடம் கொடுங்கள் என்றார். அவருக்கு பதவி ஆசைதான் எப்போதும். ஆட்சியை தக்க வைக்க எதையாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் அவருக்கு. பத்து பொருள் அடங்கிய பாக்கெட்டை 50 ரூபாய்க்கு கொடுப்பதாக கூறியுள்ளார்.

நேற்று காலையில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கலாம் என்றார். மாலையில் புதுச்சேரியிலும் பங்கு கேட்போம் என்கிறார். எப்போது பார்த்தாலும் அவருக்கு பதவி ஆசைதான். பதவி ஆசை அவரை விடாது.

யாருக்கும் என்னால் இடைஞ்சல் இல்லை ...

தமிழ் சினிமாவிலும் சரி, பொதுமக்களிடமும் சரி என்னால் இதுவரை எந்த இடைஞ்சலும் வந்ததில்லை. மற்றவர்களை காப்பாற்றியிருக்கிறேனே தவிர யாருக்கும் இடைஞ்சல் தந்ததில்லை.

காவல்துறை நடுநிலையுடன் இருக்க வேண்டும். பக்கத்தில் இருப்பவர்களிடம் நல்ல முறையில் விசாரிக்க வேண்டும்.

இந்த ஆளுங்கட்சி மோசமானவற்றை சொல்லிக்க கொடுக்கிறது. எப்படியெல்லாம் தப்பு செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கிறது. இது வேதனை தருகிறது. ஒரு வருடம் கழித்து வந்து அடிக்க எனக்கு என்ன தலையெழுத்தா.

திமுக-அதிமுக போலீஸ் ஒழிய வேண்டும் ..

முதலில் தமிழ்நாட்டு காவல்துறையில் உள்ள திமுக போலீஸ், அதிமுக போலீஸ் ஒழிய வேண்டும். காவல்துறையினரின் போக்கையெல்லாம் பார்த்து விட்டு, காக்கி டிரஸ் போட்டு நடிக்கவே கூடாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு நான் வந்து விட்டேன். என்ன பேசினாலும் கேஸ், எத்தனை பொய் கேஸ்.

என்ன நடக்குதோ நடக்கட்டும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். யார் என்ன செய்தாலும், தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

எனது கூட்டங்கள், மாநாட்டுக்கு வரும் தேமுதிக தொண்டர்கள், கடையில் வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் போனார்கள் என்று கூட செய்தி வந்தததில்லை. டீக்கடை, பெட்டிக்கடை என எங்காவது எனது கட்சியினர் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் போனார்கள் என்று புகார் உண்டா. எனக்கு பாதுகாப்பு இல்லாமல் நான் போய்க் கொண்டிருக்கிறேன். எனக்கு எனது தொண்டர்கள் இருக்கிறார்கள்.

ஐந்து வருடம் பாஜக ஆட்சியில் இருந்தாரே, அப்போது முல்லைப் பெரியாறு அணைக்கு தீர்வு கண்டாரா கருணாநிதி. பாலாறுப் பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தவர் இவர்.

இவர் எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் ரவுடியிசம் தலை தூக்கும். எதையும் ஸ்டண்டுக்காகவே செய்வார். எப்போதும் இவருக்கு கிரிமினல் மைன்ட்தான்.

அண்ணாவுக்குப் பின்னர் ஐந்து பெரிய தலைவர்கள் இருந்த நிலையில் அவர்களைத் தாண்டி இவர் தலைவராக காரணம், அவருடைய இந்த கிரிமினல் புத்திதான். இவரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

என்னை எப்படி ஒழிக்க முடியும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார். என் வீட்டைச் சுற்றி போலீஸ். நல்லதைச் சொல்லி அவரால் ஓட்டு வாங்க முடியாது. எல்லாமே ஊழல். எல்லாமே பொய்க் கேஸ். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

கருணாநிதியே போட்டியிட்டாலும் கவலை இல்லை...

வடிவேலு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார். தேர்தலில் நிற்பேன் என்கிறார். யார் வேண்டுமானாலும் நிற்கலாம், இது ஜனநாயக நாடு. கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு தெரியும் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று.

சிறுபிள்ளைத்தனமாக ஏன் கருணாநிதி செயல்படுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு பெரியார் விருது தருகிறார்கள். விலைவாசி விஷம் போல உயருகிறது. அதைத் தடுக்க வழியைக் காணோம். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எதையாவது செய்து கொண்டிருக்கிறார்.

நான் என்ஜின். எனக்குப் பின்னால் உள்ளதெல்லாம் பெட்டிகள் என்றார். இப்போது ஒவ்வொரு பெட்டியாக போய்க் கொண்டிருக்கிறது. இப்போது என்ஜினும், ஒரே ஒரு பெட்டியும் மட்டும்தான் உள்ளது.

போலீஸ் துரோகம் செய்யக் கூடாது...

மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு போலீஸ் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. எனது தொண்டர்கள் எந்த நேரத்திலும், நான் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு செய்யலாம். ஆனால் பொதுவாக எனது தொண்டர்கள் அமைதியானவர்கள்.

உண்மை உறங்கும்போது பொய்கள் முழித்துக் கொண்டிருக்கும். 2 வருஷம் வரை இந்த அரசு தாங்குமா என்பதே இப்போது சந்தேகம்தான். அதுவரைக்கும் கூட இது தாங்காது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும்.

இந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓய மாட்டேன். தைரியத்தை சோதித்துப் பார்த்தால் அது முடியாது. நான் தைரியமானவன். மக்கள் பிரச்சினைகளுக்காக உள்ளே தூக்கிப் போட்டால் தைரியமாக போவேன்.

எங்கே போய் விழுவீர்களோ தெரியாது...

காவல்துறை நல்லவர்களுக்காக பாடுபட வேண்டும். கெட்டவர்களுக்குத் துணை போகாதீர்கள். அடுத்த ஆட்சி மாறினால், நீங்கள் எங்கே போய் விழுவீர்கள் என்று தெரியாது. அத்தனையும் தூசு தட்டி எடுக்கப்படும். அப்போது நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நீங்கள் சம்பாதித்த காசை திரும்ப வாங்குவோகம்.

நான் நியாயமான அரசியல் செய்கிறேன், மக்களுக்காகப் பேசுகிறேன். சினிமாவில் 30 வருடமாக இருக்கிறேன். இதுவரை எங்காவது என்னால் சண்டை, அடிதடி நடந்தது என்று செய்தி வந்திருக்கிறதா.

இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்களே, மதுரையில் தினகரன் அலுவலகத்தை எரித்து 3 பேரை கொன்றார்களே அது என்னாச்சு. லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரை விடுவித்துள்ளார்களே, அதற்கு என்ன பதில்.

பேச்சைத் தடுக்க பவர் கட்...

இப்போது எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் என எனக்கு செய்தி வந்துள்ளது. இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். இதுதான் சர்வாதிகார ஆட்சி என்றார் விஜயகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+