சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கு ஜாமீன்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் மற்றும் சண்முகத்துரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி சென்னை தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு ஊழியர்களைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகியோர் தலைமறைவானார்கள்.
3 பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அங்கும் மனுதள்ளுபடியானது.
இதையடுத்து 3 பேரும் கோர்ட்டில் சரணடைந்தனர்.அதன் பின்னர் 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி 3 பேரும் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து 3 பேரும் உயர்நீதிமன்றத்தை அணுகினர். 3 பேரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி ரகுபதி, 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார்.
அதன்படி 3 பேரும் தலா ரூ. 25 ஆயிரம் ரொக்க ஜாமீன் மற்றும் தலா இரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக மூன்று உரிமையாளர்களும் தாக்கல் செய்திருந்த மனுவில், சதிச் செயல் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம். இதை மாம்பலம் போலீஸார் விரிவாக விசாரிக்க வேண்டும்.
உயிரிழப்பு ஏற்படும் வகையில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியே அஜாக்கிரதையான போக்கில் நாங்கள் செயல்பட்டிருந்தாலும் கூட, அதற்கு எங்கள் மீது 304 ஏ பிரிவின் கீழ் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீஸார், 304வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வம், ஜெபசிங் ஆகியோர் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.












Click it and Unblock the Notifications