தூத்துக்குடியில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று காலை மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி ராமநாடார் விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவர் ஒரு மாதத்திற்கு முன்புதான் வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விடுதலையானார்.
இந்த நிலையில் இன்று காலை டீக் கடைக்கு அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல், சதீஷை சூழ்ந்தது. அவர்களிடமிருந்து தப்பி சதீஷ் ஓடினார்.
ஆனால் விடாமல் துரத்திய அந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி சதீஷை சரமாரியாக வெட்டியது. இதில் சதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
மக்கள் நெரிசல்மிக்க பகுதியில் நடந்த இந்த படுகொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வட பாகம் போலீஸார் உடனடியாக விரைந்து வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.