நகைக்கடை வேனை மறித்து கொள்ளை: 5 பேர் கைது-மேலும் ரூ.1.50 கோடி பறிமுதல்
சென்னை: திருச்சியில் நகைக் கடை ஊழியர்களின் வேனை வழிமறித்து ரூ.3.72 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நகைக்கடை ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மங்கள் அன்ட் மங்கள் நகைக்கடை ஊழியர்கள் சென்னையில் தங்க நகைகளை வாங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரூ.3.72 கோடி பணத்துடன் வேனில் சென்றனர்.
அன்று காலை 8.15 மணியளவில் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் பாலத்தை வேன் நெருங்கியபோது போலீஸ் உடையில் இருந்த 11 பேர் கொண்ட கும்பல் அந்த வாகனத்தை வழிமறித்தது. வாகனத்தை சோதனையிடுவது போல நடித்து நகைக்கடை ஊழியர்கள் சீனிவாசன், பூபதி, செந்தில்குமார் ஆகியோரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் நகைக் கடையின் முன்னாள் ஊழியர் சுந்தர் என்ற சுந்தரேசன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் திருச்சி அடுத்த திருவெறும்பூர் காட்டில் ஒரு பனை மரத்தில் ரூ.75 லட்சத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந் நிலையில் மேலும் 5 பேர் பிடிபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்ட அதேசமயம் வேறு வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் எட்வர்ட், லட்சுமணன் ஆகியோர் நடத்திய இன்னொரு வழக்கு விசாரணையில் இந்தக் கொள்ளை தொடர்பான ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் நகைக்கடை ஊழியர் சண்முகமணி குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, கொள்ளை நடந்த அன்று அவர் பணிக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்றபோது மதுரை கோயிலுக்கு சென்றிருந்ததாக சண்முகமணி தெரிவித்தார்.
போலீஸார் தொடர்ந்து சண்முகமணியிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவரும், மருது என்ற மற்றொரு ஊழியரும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியந்தது. இவர்கள் இருவரும் தனிப்பட்ட காரணத்திற்காக பண உதவி கேட்டபோது கடை உரிமையாளர் தர மறுத்துள்ளார். அந்த கோபத்தில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
சென்னையில் நகை வாங்குவதற்காக வேனில் பணம் அனுப்புவது குறித்து கடை உரிமையாளர், வேன் டிரைவரிடம் கூறுவதை சண்முகமணி ஒட்டு கேட்டுள்ளார். இது கடையில் வைத்துள்ள ரகசிய கேமிராவில் பதிவாகியிருந்தது.
சண்முகமணியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அதை அவர் கொள்ளையை ஒப்புக் கொண்டார். பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு தென்னூரிலுள்ள தனது நண்பர் சுந்தரேசன் என்பவரின் உதவியை நாடினார். அவர் திருச்சியைச் சேர்ந்த ராஜா, கண்ணன், மதுரையைச் சேர்ந்த நோயல் ஆகியோர் உட்பட ஒரு கும்பலை தயார்படுத்தினார்.
இந்த கும்பல் மாருதி காரில் சேப்பாக்கம் பாலம் அருகே காத்திருந்து பணத்துடன் கன்டெய்னர் வேன் வந்தபோது அதனை மடக்கி பணத்தை கொள்ளை அடித்துள்ளது. பின்னர் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து திருச்சிக்கு சென்றனர். ராஜாவின் வீட்டில் காரை நிறுத்தி விட்டு பணத்தை பங்கு போட்டுள்ளனர்.
சண்முகமணி, மருது, சுந்தரேசன், நோயல், ராஜா ஆகியோர் ரூ.1.80 கோடியும், மற்ற 6 பேருக்கு ரூ.1.92 கோடியும் பங்கு பிரித்து கொண்டனர்.
இதையடுத்து சண்முகமணி, மருது மற்றும் அவர்களின் கூட்டாளிகளான 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 1.5 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
தலைமறைவாக இருக்கும் 6 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்று கூறினர்.
பாதுகாப்பு தரப்படும்...
இதுகுறித்து ஏடிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், அதிக அளவில் பணம் எடுத்துச் செல்பவர்கள் போலீஸ் பாதுகாப்பு கோரினால் தகுந்த பாதுகாப்பு செய்து தரப்படும். ஆனால், யாரும் பாதுகாப்பு கேட்பதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications