விஜயகாந்த் என்ன மகாத்மாவா?-வடிவேலு

வடிவேலு விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், முதல்வர் கருணாநிதியையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து வடிவேலு இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் என்ன சும்மாவா இருக்கிறார். அவருடைய பணிச்சுமை அனைவருக்கும் தெரியும். என்னைத் தூண்டி விடவா அவருக்கு நேரம் இருக்கிறது.
விஜயகாந்த் ஏதோ மகாத்மாவுக்கு அடுத்து தான்தான் என்பது போல பேசுகிறார். மற்றவர்கள் எல்லாமே கெட்டவர்கள் என்பது போல பேசுகிறார்.
என்னை அடிக்கத் தூண்டியது விஜயகாந்த்தான். அவர் அனுப்பிய ஆட்கள்தான் என்னைக் கொலை செய்ய முயற்சித்தனர். இதுதான் சார் உண்மை. இதில் எந்தப் பொய்யும் இல்லை.
இதில் முதல்வரை ஏன் இழுக்கிறார், அரசியலுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம். ஏன் இந்தப் பிரச்சினையை அவர் அரசியலாக்கப் பார்க்கிறார்.
நான் கூறிய புகார்களுக்கு இதுவரை அவர் பதிலே சொல்லவில்லை. நான் கோர்ட்டுக்குப் போகக் கூடாது என்று நினைத்து இந்த செயலை செய்தனர். ஆனால் நான் கோர்ட்டுக்குப் போனேன். அவர்கள்தான் யாரும் வராமல் ஓடிப் போய் விட்டார்கள். இப்போது மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
விஜயகாந்த் தனது ரவுடியிசத்தை என்னிடம் காட்டக் கூடாது. நான் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
எனது வீட்டை தாக்கத் தூண்டியது விஜயகாந்த்தான். அவர் அனுப்பிய ஆட்கள்தான் எனது வீட்டைத் தாக்கினர். இதுதான் உண்மை.
இந்த விஷயத்தில் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் முதல்வரையும், காவல்துறையினரையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் சரத்குமார் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். அதேபோல பல நடிகர், நடிகைகளும் என்னைத் தொடர்பு கொண்டு பேசி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்றார் வடிவேலு.












Click it and Unblock the Notifications