திமுக அரசை கண்டித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: சாலை வசதி, அரசு பஸ் போக்குவரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மிகவும் பழுதடைந்திருப்பது, கிராம பகுதிகளில் அரசு பஸ் இயக்காத திமுக அரசை கண்டித்தும், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆர்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சேகர் சிவசாமி தலைமை வகித்தார். இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கோவில்பட்டி வரையிலும் உள்ள சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகள் இயங்கும் நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சி மன்றங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைகள் நடைபெறுகிறது. வேலை செய்வோருக்கு அரசு நிர்ணயம் செய்த கூலியை விட குறைவாக கொடுக்கப்படுகிறது.
இதனால் தற்போது, அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பணிகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் உள்ள திமுக அரசு மௌனம் காக்கிறது என்றனர்.