உளவுத்துறை பலப்படுத்த நடவடிக்கை-டிஜிபி
மதுரை: தமிழக உளவுத்துறை மேலும் பலப்படுத்தப்படும் என்று தமிழக டிஜிபி ஜெயின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் காவல் பணிகளை குறித்து ஐஜி, டிஐஜி, மற்றும் எஸ்பிக்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலின்போது மாநகராட்சி பகுதியில் நடந்த மோதல்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டிய கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாநில காவல் ஆணையமும் சில பரிந்துரைகளை அளித்தது. துறையை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. தமிழகத்துக்கு மிரட்டல் எதுவும் இல்லை. என்றாலும், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உளவுத்துறை மேலும் பலப்படுத்தப்படும்.
தமிழகத்தில் விடுதலை புலிகள் நடமாட்டம் அதிகளவில் இல்லை. புலிகளுக்குத் தேவையான பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் சில நடந்துள்ளன. ஆனால் பதட்டப்படும் அளவுக்கு சம்பவங்கள் எதுவும் இல்லை.
இதுதொடர்பாக, கடலோர காவல்ப்படை, கியூ பிரிவு ஆகிய துறைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அகதி முகாம்களில் இருந்து கொண்டு இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் சிறப்பு முகாம்பகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் எந்த ஒரு அரசியல் அதிகார மையமும் காவல் துறையை கட்டுப்படுத்தவில்லை. அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவது வழக்கமானதே. போலீஸார் பாரபட்சிமின்றி செயல்பட்டு வருகின்றனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டங்களின் கீழ் 306 பேரும், இந்தாண்டு இதுவரை 323 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் தற்போது 15 சதவீத காலி பணியிடங்கள் உள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில் 4 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படும். 2009-10ல் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்றார்.