இன்றும் வங்கிகள் ஸ்டிரைக் நீடிப்பு: மக்கள் பெரும் அவதி
டெல்லி: 2வது நாளாக இன்றும் நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்கள் பணம் எடுக்க முடியாமல், போட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் விடக் கூடாது, அன்னிய முதலீடுகளை அதிகரிக்கக் கூடாது என்பவை உள்ளிட்ட கோரிக்ககளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை வங்கிகள் உள்ளிட்டவை 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நேற்று தொடங்கிய இந்த ஸ்டிரைக் இன்றும் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் அனைத்து அரசு வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ள 26 தனியார் வங்கிகளின் கிளைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை.
இதனால் நேற்று முதல் பணப் பரிவர்த்தனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பணம் எடுக்க முடியாமலும், போட முடியாமலும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 9 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர். பல மாநிலங்களில் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களிலும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.