வாரிசு சான்றிதழுக்கு ரூ.800 லஞ்சம்: விஏஒ கைது
நெல்லை: வாரிசு சான்றிதழ் தர ரூ.800 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர்.
நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (24), விவசாயி. இவரது தந்தை சுடலைமுத்து சமீபத்தில் இறந்தார். இதையடுத்து சொத்துக்களை மாற்றம் செய்வதற்காக ஆறுமுகம் வாரிசு சான்றிதழ் பெற விஏஒ லாசர் அந்தோணி செல்வராஜை (54) அணுகி விண்ணப்பித்தார். வாரிசு சான்றிதழ் பெற கட்டணம் எதுவுமில்லை. விண்ணப்பித்தாலே போதும், கிடைத்துவிடும்.
ஆனால் சான்றிதழ் தர ரூ.800 லஞ்சம் கேட்டுள்ளார் விஏஒ லாசர். இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் ஆறுமுகம் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லாசரை கண்காணித்தனர்.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஆறுமுகம் பணம் கொடுக்க அழகியபாண்டிபுரம் பஸ் நிறுத்தத்துக்கு சென்றார். லாசரை சந்தித்த ஆறுமுகம், ரூ.800ஐ லஞ்சமாக கொடுத்தார்.
லாசர் பணத்தை வாங்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லாசரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.